சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் சுற்று பயணம் செய்து 4 டெஸ்ட் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஜர்ஸ் (95) மற்றும் வார்னர் (101) ரன்கள் எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

அஸ்வின் வீசிய பந்தை, லெக் சைடில் சிங்கிள் தட்ட முற்பட்டபோது, பந்து சுழன்று, பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நின்ற விஜய் கைகளில் தஞ்சம் அடைந்தது. எனவே, வார்னர் 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரை அடுத்து 204 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தபோது அந்த அணிக்கு மற்றொரு சரிவு ஏற்பட்டது. முகமது ஷமி வீசிய பந்தை ரோஜர்ஸ் எதிர்கொள்ளும்போது அதனை தவற விட ஸ்டெம்பில் பந்து பட்டு போல்டானார். இதனால் ரோஜர்ஸ் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவற விட்டார்.
ஆனால் வாட்சன், கேப்டன் ஸ்மித் ஜோடி, பொறுமையாக ஆடி, சரிவில் இருந்து ஆஸ்திரேலியாவை மீட்டது. ஆட்ட நேர இறுதியில், அந்த அணி 348 ரன்களை குவித்தது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. வாட்சன் 61 ரன்களுடனும், ஸ்மித் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் விக்கெட் எடுக்க தவறிவிட்டார்.