சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது இந்திய அணி. இருப்பினும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவந்தது. முதல் இரு டெஸ்டுகளையும், ஆஸ்திரேலியா வென்ற நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதனிடையே தொடரின் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில், கடந்த 6ம்தேதி தொடங்கியது. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து, 572 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2வது பேட்டிங் செய்த இந்தியா, கேப்டன் விராட் கோஹ்லி, தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ஆகியோரின் சதங்களால் தலை நிமிர்ந்து, 475 ரன்கள் குவித்தது.
2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 251 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 349 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி, தொடக்கத்தில் இரு விக்கெட்டுகளை இழந்தபோதிலும், விஜய் மற்றும் கோஹ்லி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
விஜய் 80 ரன்களிலும், கோஹ்லி 46 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், முதல் இன்னிங்சை போலவே சுரேஷ் ரெய்னா டக் அவுட் ஆகினார். அடுத்ததாக விக்கெட் கீப்பர் சாஹாவும் டக் அவுட் ஆக இந்தியா தோல்வியை நோக்கி நடைபோடத் தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர்கள் உற்சாக மிகுதியில் ஆக்ரோஷமாக பந்து வீச தொடங்கினர்.
ஆனால் ரஹானே ஒருபக்கம் நங்கூரம் போட்டு நிற்க, அவருக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் நல்ல கம்பெனி கொடுத்தார். இருவரும் ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கத்தில் விளையாட தொடங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 90 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், இந்தியா 252 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ரஹானே 38 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 20 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து இரு அணிகளுக்கு நடுவேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.