டெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்களை எடுத்துள்ளது.
மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 3வது டெஸ்டில் இந்தியா வென்றது. எனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதை தவிர அணியில் மாற்றமில்லை.
தென் ஆப்பிரிக்க அணியில், பவுமா, கைல் அப்பாட் மற்றும் டேன் பியேட் சேர்க்கப்பட்டு, வன் ஜைல், ரபடா, ஹார்மர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 89 ரன்களுடனும், அஸ்வின் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முரளி விஜய் 12. தவான் 33, புஜாரா 14, கோஹ்லி 44, ரோகித் ஷர்மா மற்றும் விருதிமான் சாஹா தலா 1 ரன் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க தரப்பில் டேன் பியேட் 4 விக்கெட்டுகளையும், கைல் அப்பாட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.