மும்பை : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெறப் போகும் அந்த 15 வீரர்கள் யார் என்பதுதான் தற்போது அனைவரின் மனதிலும் கேள்வியாக இருக்கிறது.
இதற்கான பதிலை தேடும் பணியில் தான் தற்போது இந்திய அணி நிர்வாகமும் ஈடுபட்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் ,ஆசிய கோப்பை தொடர் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இந்திய அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு 5 வேக பந்துவீச்சாளர்கள் ரெடியாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் ஸ்டார் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தற்போது முழு உடல் தகுதியை பெற்றிருக்கிறார். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக பும்ரா களம் இறங்க உள்ளார். இதனால் அவர் இந்திய அணியில் இடம் பெறப்போவது உறுதியாகிவிட்டது.
தன்னுடைய உடல் தகுதியையும் பார்மையும் அவர் நிரூபித்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு பும்ராவின் பெயரை சேர்த்துவிடலாம்.இதைப் போன்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் முகமது சமி. இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் சமி தற்போது ஓய்வில் இருக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷமியின் வேகம் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்த முகமது சிராஜ். சிராஜ் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நல்ல நெருக்கடி கொடுத்து வருகிறார்.இதனால் சிராஜின் பெயர் நிச்சயமாக உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டர் என்பதால் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே பலம் வாய்ந்து விளங்குகிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிக்கப் போகும் வீரர் சர்துல் தாக்கூர். 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்திய வீரர் என்ற பெருமை தாக்கூருக்கு இருக்கிறது. சத்தமே இல்லாமல் இந்த சாதனை செய்திருக்கும் ஷர்துல் தாக்கூர் பேட்டிங்களும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இதனால் அவரும் உலகக்கோப்பை தொடரில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது.