பெங்களூரு: இந்திய அணியின் 5 நட்சத்திர வீரர்களுக்கு மட்டும் யோ-யோ டெஸ்ட் கூட நடத்தப்படாமல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் வீரர்கள் யோ-யோ டெஸ்ட் தகுதி தேர்வில் வெற்றிபெற வேண்டியது கட்டாயப்பட்டுள்ளது. இந்த தேர்வில் இந்தியா அணி வீரர்கள் 16.1 அளவிலான புள்ளிகளை பெற வேண்டிய கட்டாயமாக இருந்தது. ஆனால் நாளடைவில் யோ-யோ டெஸ்ட் வெவ்வேறு வகையில் மாற்றம் பெற்றுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆசியக் கோப்பை தொடருக்கு தேர்வாகியுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் உட்பட அனைத்து வீரர்களுக்கும் உடற்தகுதி தேர்வு செய்யப்பட்டது. யோ-யோ டெஸ்டில் அனைத்து வீரர்களும் சிறப்பாக எதிர்கொண்டு தகுதிபெற்றனர். ஆனால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 5 வீரர்களுக்கு மட்டும் யோ-யோ டெஸ்ட் வைக்கப்படவில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் முதல் வீரராக கேஎல் ராகுல் இருக்கிறார். இதுவரை ஃபிட்னஸ் டெஸ்டிலேயே தேர்ச்சி பெறாத கேஎல் ராகுல், யோ-யோ டெஸ்டில் கலந்துகொண்டால் காயம் மேலும் தீவிரமாகும் சூழல் உள்ளது. இதனால் கேஎல் ராகுலுக்கு யோ-யோ டெஸ்ட் வைக்கப்படாமலேயே பேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் காயத்தில் இருந்து மீண்ட வீரர்களான பிரசித் கிருஷ்ணா மற்றும் பும்ரா ஆகியோருக்கும் யோ-யோ டெஸ்ட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் தொடர்ச்சியாக ஆடியுள்ளதால், சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கும் யோ-யோ டெஸ்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி கேப்டனாக இருந்த போது யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால், ராயுடு மற்றும் ரெய்னா ஒருமுறை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டும் பயணத்தில் கழற்றிவிடப்பட்ட சம்பவம் எல்லாம் நடைபெற்றது. ஆனால் இப்போது ரோகித் சர்மா கேப்டன்சியில் யோ-யோ டெஸ்டிலேயே தளர்வு கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது