
இந்தியா, இலங்கை தொடர்
இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாம் போட்டியில் நேற்று தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் மிதாலி ராஜ் 125, ஸ்மிருதி மந்தனா 51 ரன்கள் அடிக்க இந்திய அணி 253 ரன்கள் எடுத்தது. இதை துரத்திய இலங்கை அணியில் கேப்டன் ஜெயங்கனி 115 ரன்கள் எடுக்க ஆட்டம் விறுவிறுப்பாக கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி முதல் நான்கு பந்துகளில் 5 ரன்கள் எடுக்க, ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை பெற்றது.

போன் பேசிய 5 பேர்
இந்த போட்டியின் போது 5 இந்திய பார்வையாளர்கள் அதிக நேரம் போன் பேசிக் கொண்டு இருந்ததாக கூறி அவர்களை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர் அதிகாரிகள். அவர்களுடைய நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததாகவும், அவர்கள் அளவுக்கு அதிகமாக போனில் பேசிக் கொண்டு இருந்ததாகவும் கூறினார் இதற்கு விளக்கமளித்த இலங்கை கிரிக்கெட் அதிகாரி ஒருவர்.

காவல்துறை விசாரணை
மைதானத்தை விட்டு வெளியேறிய அந்த 5 பேரையும் இலங்கை காவல்துறை விசாரித்து வருகிறது என்ற தகவல் வந்துள்ளது. இலங்கை அதிகாரிகள் அவர்கள் சந்தேகப்படும் நபர்கள் வெளிநாட்டு சூதாட்ட கும்பலோடு தொடர்பில் இருக்கலாம் என கூறியுள்ளனர்.

இலங்கையில் புதிய கட்டுப்பாடு
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மேட்ச் பிக்ஸிங் சூதாட்ட சந்தேகத்தின் பேரில் பலர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் இந்திய, பாகிஸ்தான் பார்வையாளர்கள் தான் குறி வைக்கப்படுகின்றனர். கடந்த மாதம் உள்ளூர் டி20 தொடரின் போது இதே போல அதிகம் போன் பேசிய இரண்டு இந்தியர்கள் விசாரிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications