தென்னாப்பிரிக்க சீரிஸ்
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடர் ஜுன் 9ம் தேதி டெல்லியில் தொடங்கி ஜூன் 19ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. ஐபிஎல்-ல் விளையாடியதை பொறுத்து தேர்வு அமையவுள்ளது.
ஆலோசனை
தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தலைமையில் நாளை மும்பையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த வீரர்கள் தேர்வு என்ற இறுதிப்பட்டியல் முடிவு செய்யப்படும். ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி, பண்ட், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ள சூழலில் புதிய அணியை உருவாக்குகின்றனர்.
5 பேருக்கு இடம் உறுதி
இந்நிலையில் 5 வீரர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல்-ல் கலக்கிய இளம் வீரர்கள் உம்ரான் கான் மற்றும் மோஷின் கான் ஆகியோர் தென்னாப்பிரிக்க தொடரில் அறிமுகமாகவுள்ளனர். உம்ரான் கான் 13 போட்டிகளில் 21 விக்கெட்களும், மோஷின் கான் 8 போட்டிகளில் 13 விக்கெட்களை எடுத்துள்ளார்.
சீனியர்களின் கம்பேக்
இதே போல இந்திய அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்பின்றி தவித்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கம்பேக் தருகின்றனர். காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யாவும் மீண்டும் வருகிறார். தினேஷ் கார்த்திக் 14 போடிகளில் 287 ரன்கள், ஷிகர் தவான் 13 போட்டிகளில் 421 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 13 போட்டிகளில் 413 ரன்கள் என குவித்துள்ளனர்.
மொத்தம் 4 துறைகள்
இந்திய அணிக்கு தற்போதைக்கு கேப்டனாகவும், ஓப்பனிங்கை பார்த்துக்கொள்ளவும் ஷிகர் தவான் உள்ளார். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யாவும், ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் இருப்பார் என தெரிகிறது. உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டால் அணி 4 துறைகளிலும் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.