
ஆஸி, தொடர்
டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரையும் வெற்றியுடன் தொடங்க இந்திய அணி முனைப்பு காட்டுகிறது. கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தவுள்ளார். பேட்டிங்கில் சுப்மன் கில், இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் என மிகவும் பலமாக உள்ள சூழலில் பவுலிங் துறை தான் சிக்கலாக உள்ளது.

என்ன சிக்கல்
மும்பை வான்கடே மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் என இருவருக்குமே உதவிகள் கிடைக்கும். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்துவீச்சில் உதவுவார். இதே போல நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்குள் வந்துள்ளதால் ஒரு இடத்தை அவர் பிடித்துவிட்டார். வேகப்பந்துவீச்சில் பாண்ட்யாவுக்கு உறுதுணையாக முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம்பிடிப்பார்கள்.

2 இடங்கள் காலி
4 பவுலர்கள் தேர்வாகிவிட்ட சூழலில் மீதுமுள்ள 2 இடங்களுக்கு தான் சிக்கலே உள்ளது. ஜடேஜாவுடன் இணைந்து அக்ஷர் பட்டேல் சிறப்பாக செயல்படுவார். ஆனால் இரண்டு ஃபிங்கர் ஸ்பின்னர்களுடன் செல்வதை விட குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன் செல்வது தான் நல்லது. எனவே ரிஸ்க் எடுத்து அக்ஷரை கொண்டு வருவார்களா அல்லது குல்தீப் யாதவ் - சாஹல் ஆகியோரில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குழப்பமாகியுள்ளது.

ஆல்ரவுண்டரின் இடம்
இதே போல ஜடேஜாவுடன் சேரப்போகும் மற்றொரு ஆல்ரவுண்டர் யார் என்ற குழப்பம் இருந்து வருகிறது. வாஷிங்டன் சுந்தர் - அக்ஷர் பட்டேல் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மற்றொருபுறம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை கொண்டு வரலாமா என்ற பேச்சுக்களும் இருந்து வருவதால் யாருக்கு அந்த இடம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











