
304 ரன்களைத் துரத்தி
304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா துரத்திக் கொண்டிருந்தது. சும்மா சொல்லக் கூடாது. பிரமாதமாகவே இருந்தது இந்தியாவின் சேசிங்.

ரோஹித் அபாரம்
ரோஹித் சர்மா அபாரமாக ஆடினார். தொடக்க ஆட்டக்காரரான அவர் அதிரடியாக ஆடி 150 ரன்களைக் குவித்தார். கிட்டத்தட்ட இந்தியா வெற்றி பெறும் என்ற எண்ணமே நாலா பக்கமும் இருந்தது.

மாற்றிப் போட்ட கடைசி 5 ஓவர்கள்
ஆனால் கடைசி ஐந்து ஓவர்கள் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விட்டது. இந்தியாவின் தோல்விக்கும் ஐந்து காரணங்களே முக்கியமாக அமைந்து விட்டது.

அஸ்வின் காயம்
சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வினுக்கு இந்தப் போட்டியின்போது திடீரென சுளுக்கு ஏற்பட்டு தொடர்ந்து பந்து வீச முடியாமல் போனது முக்கியமான முதல் காரணம். சிறப்பாக பந்து வீசி வந்தார் அஸ்வின். ஆனால் அவரது 4வது ஓவரில் சுளுக்கு ஏற்பட்டு தொடர்ந்து பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மொத்தத்தில் 4.4. ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே கொடுத்த அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்து பாதியிலேயே வெளியேறினார்.

இம்ரான் தாஹிரின் 2 விக்கெட்
இந்தியா 24 பந்துகளில் 35 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. கையிலோ 7 விக்கெட்கள் இருந்தன. ரோஹித் சர்மா 150 ரன்னில் இருந்தார். மிக ஈசியான நிலைமைதான். ஆனால் 47வது ஓவரில் எமன் விளையாடி விட்டான். தாஹிர் வீசிய அந்த ஓவரில் முதல் பந்திலேயே ரோஹித் அவுட்டானார். அடுத்து 5வது பந்தில் சுரேஷ் ரெய்னா வெளியேறினார்.

கடைசி 6 ஓவர்கள்
கடைசி ஓவர்களில் இந்தியாவின் பந்து வீச்சு பெரும் சொதப்பல் என்பதை நேற்றைய போட்டி நிரூபித்தது. தென் ஆப்பிரிக்கா தனது பேட்டிங்கின்போது கடைசி 6 ஓவர்களில் பேயாட்டம் போட்டு விட்டது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் அவர்கள் 86 ரன்களை விளாசினர். 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 217 என்ற நிலையில் இருந்த அவர்கள் 50வது ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 303 ரன்களைக் குவித்திருந்தனர்.

வெளுத்து வாங்கிய டிவில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்காவின் ஏப் டிவில்லியர்ஸ் எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் பிரித்து மேய்ந்து விடுவார் என்பதை நேற்றைய போட்டி நிரூபித்தது. எதிராளிகளுக்கு எப்போதுமே இவர் சிம்ம சொப்பனம்தான். கேப்டனாகவும் உள்ள டிவில்லியர்ஸ் நேற்றைய போட்டியில் 73 பந்துகளில் 104 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு பலம் சேர்த்தார்.

ககிஸோ ரபடாவின் அட்டகாசமான கடைசி ஓவர்
இந்தியாவின் சேஸிங்கின்போது தென் ஆப்பிரிக்கா தரப்பில் கடைசி ஓவரை வீசியவர் இளம் வீரரான ககிஸோ ரபடா. அபாரமாக வீசினார் ககிஸோ. கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 11 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் 20 வயதான இந்த இளம் வேகப் பந்து வீச்சாளர் டோணியையும், ஸ்டூவர்ட் பின்னியையும் அடுத்தடுத்த பந்துகளில் சாய்த்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்..


Click it and Unblock the Notifications