
அதே அணி
இப்போட்டியில் புஜாராவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் அல்லது மாயங்க் அகர்வால் அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அணியின் எந்தவிதம் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.

7வது முறை கோலி அவுட்
இந்நிலையில், இன்று 3வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். ஆனால், எதிர்பாராதவிதமாக லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் விளாசிய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், புஜாரா 2வது ஓவரிலேயே களமிறங்கினார். ஆனால், ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் விராட் கோலி.

ஒரு சதம் கூட இல்லை
சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல்.. அதாவது சதம் அடிக்க முடியாமல், விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 50 போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார். இன்று டாஸ் வென்ற பிறகு பேட்டியளித்த கோலி. "எனது பேட்டிங்கை இன்னும் மேம்படுத்தி, அணிக்குள் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன். நான் எனது செயல்முறையை நம்புகிறேன், சில நேரங்களில் அது களத்தில் சரியாக செயல்படாமல் போய்விடும், ஆனால் அணியின் செயல்திறனில் நான் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறேன் என்பதில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். அக்கறையாகவும் இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

டான்ஸிங் ரோஸ்
ஆனால், எந்தவித ஃபூட் ஒர்க்கும் இல்லாமல் கோலி அவுட்டாகி வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களை விடுங்க, அவருக்கே முதலில் தன் மீதிருக்கும் கான்ஃபிடன்ஸ் குறைந்துவிடும். வேகப்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியாக விளங்கும் பிட்ச் ஹெட்டிங்லே என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கையில், இங்கு "டான்ஸிங் ரோஸ்" போல் அதிக மூவ்மெண்ட் கொடுத்து விளையாடி இருக்கலாம். கால்களை அதிகம் நகர்த்தி விளையாடி இருக்கலாம். ஒரு சீனியர் வீரராக விராட் கோலி இதை செய்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் மீண்டும் அவரும் ரஹானேவும் சரி, எந்தவித மூவ்மெண்ட்டும் இல்லாமல் விளையாடி தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ரஹானே காலி
ஆம்! ரஹானேவும் உணவு இடைவேளைக்கு முன்பே அவுட்டாகி வெளியேறினார். ஓலே ராபின்சனின் துல்லியமான லைன் அன்ட் லெந்த் பந்தில், ரஹானே கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். 54 பந்துகளை சந்தித்த ரஹானே 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். 8 ஓவர்கள் வீசியிருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் உணவு இடைவேளைக்கு முன்பே, இந்தியாவின் நிலை, பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டது. இதற்கு மத்தியில் தொடர்ந்து 50 போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் கேப்டன் விராட் கோலி ஒப்பேற்றி வருவது இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகுதோ தெரியவில்லை!.


Click it and Unblock the Notifications











