டெல்லி: 5 போட்டியில் 50 விக்கெட்டுகளை சாய்ப்பது லேசுபட்டவேலையில்லை, அதை இந்தியா சிறப்பாக செய்துள்ளது என்று புகழந்தார், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்', சோயிப் அக்தர்.
ஸ்டார் டிவியின் ஹிந்தி கமெண்டரி பிரிவில் பணியாற்றி வரும் பாக். முன்னாள் அதிவேக பந்து வீச்சாளரான அக்தர், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:

நடப்பு உலக கோப்பையில், இந்தியா இதுவரை மோதிய 5 போட்டிகளிலும், எதிரணிகளின் அனைத்து விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளது. ஐந்து போட்டிகளில் ஐம்பது விக்கெட்டுகளை சாய்ப்பது லேசான வேலை கிடையாது. அதை இந்தியா சாதித்துள்ளது.
முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும், இந்தியாவின் இந்த சாதனைக்கு மிகவும் உதவிகரமாக இருந்துள்ளனர். இருவரும் இணைந்து பந்து வீசுவதை பார்ப்பதே கொள்ளை அழகாக உள்ளது. இரு பவுலர்களுமே மிகவும் ரசித்து விளையாடிவருகின்றனர்.
ஷமி மற்றும் உமேஷ் யாதவ், உலகத் தரம்மிக்க வேகப் பந்து வீச்சாளர்களாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.