
டெல்லி: சச்சின், டிராவிடுக்கு அடுத்து, 500வது சர்வதேசப் போட்டியில் விளையாடியுள்ள மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். உலக அளவில் இந்த சாதனையைப் புரியும் 9வது வீரர் தோனி.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் விளையாடியதன் மூலம், 500வது சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மூன்றாவது இந்தியர் மற்றும் 9வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், 664 போட்டிகளில் விளையாடி இந்தப் பட்டியலில் டாப்பில் உள்ளார். இலங்கையின் ஜெயவர்த்தனே (652), சங்கக்காரா (594), ஜெயசூர்யா (586), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (560), பாகிஸ்தானின் ஷாகித் அப்ரித் (524), தென்னாப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் (519), இந்தியாவின் டிராவிட் (509) ஆகியோர் மட்டுமே 500க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
2004ல் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கிய தோனி, இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 318 ஒருதினப் போட்டிகள், 92 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதிக டி-20 போட்டிகளில் விளையாடிய இந்தியர்களில் முதலிடத்தில் தோனி உள்ளார்.