புனே: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 100வது ஒருதினப் போட்டியில் வென்றதன் மூலம், தனது 50வது வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
நியூசிலாந்து அணி, மூன்று ஒருதினப் போட்டி, மூன்று டி-20 போட்டித் தொடரில் விளையாட வந்துள்ளது. முதல் ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

மிகவும் இக்கட்டான நிலையில், புனேயில் நடந்த இரண்டாவது ஒருதினப் போட்டியில் இந்தியா களமிறங்கியது. ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை அணியை வென்று 1-1 என்று சமநிலையை இந்தியா உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் கான்பூரில் வரும் 29ம் தேதி நடக்க உள்ள மூன்றாவது ஒருதினப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் ஒரு தொடரைக் கூட இழக்கவில்லை என்ற சாதனையை தக்க வைக்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.
புனேயில் நேற்று நடந்த போட்டி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடக்கும் 100வது ஒருதினப் போட்டியாகும். இதில் வென்றதன் மூலம், 50வது வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. நியூசிலாந்து அணி 44 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டி டை ஆனது. 5 போட்டிகளில் முடிவு ஏதும் கிடைக்கவில்லை.