சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியாக அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி பவுலிங்கை தேர்வு செய்தார். வார்னர், மிட்சல் மார்ஷ் சதங்கள் உதவியோடு அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. இரண்டாவது பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்தது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று கடைசி ஒன்டே நடைபெற்றது.

இதனால் ஒயிட்வாஷை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று களமிறங்கியது.
இந்திய அணிக்காக, சர்வதேச போட்டிகளில் முதல்முறையாக ஜஸ்ப்ரிட் பும்ரா, களமிறங்கினார். 22வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர், புவனேஸ்வர்குமாருக்கு பதிலாகவும், காயமடைந்த ரஹானேவுக்கு பதிலாக, மனிஷ் பாண்டேவும் களமிறங்கினர்.
தொடக்கம் முதல் ஆஸி. பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கினர். ஜஸ்ப்ரிட் பும்ரா மட்டும் சிக்கனமாக பந்து வீசி 10 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 330 ரன்கள் குவித்தது. வார்னர் அதிகபட்சமாக 122 ரன்கள் குவித்து அவுட் ஆனார். மிட்சல் மார்ஷ் 102 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ரன்களை அள்ளிக்கொடுத்த உமேஷ் யாதவ் மற்றும் ரிஷி தவான் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 331 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி ஆடியது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா ஜோடி 123 ரன்கள் குவித்து, வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது.
இருப்பினும், கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா விக்கெட்டுகளை தொடர்ந்து டோணி களமிறங்கியபிறகு, போட்டி ஆஸி., பக்கம் சாய்ந்தது. ஒரு பக்கம் இளம்வீரர் மனிஷ் பாண்டே தைரியமாக அடித்து ஆடியதால் இந்தியாவுக்கு நம்பிக்கை தொடர்ந்தது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டம் ஏற்பட்டது. அந்த ஓவரின் 4வது பந்தில் இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 331 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மனிஷ் பாண்டே 81 பந்துகளில் 104 ரன்கள் அடித்து கடைசி வரை நாட்-அவுட்டாக நின்றார். ரோகித் ஷர்மா 99 ரன்களில் அவுட் ஆனார். டோணி 42 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 2வது பந்தில் அவுட் ஆனார்.
கடைசி ஓவரின் முதல் பந்தில் டோணி சிக்சர் அடித்திருந்தார். 3வது பந்தை பாண்டே 4 ரன்களுக்கு விரட்டி சதம் போட்டார். 4வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த வெற்றியின் மூலம், இந்தியா ஒயிட்வாஷை தவிர்த்து ஆறுதல் அடைந்தது.