கொழும்பு: லங்கா பிரீமியர் தொடரில் ஜஃப்னா - டம்புல்லா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, திடீரென மைதானத்திற்குள் 6 அடி நீளமுள்ள பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவது போல், கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 4வது ஆண்டாக லங்கா பிரீமியர் லீக் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் போட்டியில் கொழும்பு - ஜஃப்னா அணிகள் விளையாடின. இதில் ஜஃப்னா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் 2வது போட்டியில் காலே டைட்டன்ஸ் அணியை எதிர்த்து டம்புல்லா ஆரா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற டம்புல்லா அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய காலே அணி, ராஜபக்சா மற்றும் கேப்டன் ஷனகா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ஷனகா 21 பந்துகளில் 42 ரன்களும், ராஜபக்சே 34 பந்துகளில் 48 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய டம்புல்லா அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வந்த தனஜ்செயா 43 ரன்களும், குசால் பெரேரா 40 ரன்களும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி நேரத்துல் அலெக்ஸ் ராஸ் அதிரடி ஆட்டத்தால், ஆட்டம் டை ஆனது. டம்புல்லா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் நடைபெற்ற சூப்பர் ஓவரில் காலே அணி அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் டம்புல்லா அணி பேட்டிங் செய்த போது, ஷகில் அல் ஹசன் 4வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அப்போது திடீரென மைதானத்திற்குள் 6 அடி நீளமுள்ள பாம்பு வேகமாக வந்தது. இதனால் மிரண்டு போன வீரர்கள் சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தினர். பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நடுவர்கள் இணைந்து பாம்பை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். அதில் பாம்பின் பின் சென்று நடுவர் எளிதாக விரட்டியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.