
துபாய்: பந்து சேதப்படுத்தும் விவகாரத்தில் அதிக தண்டனை வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி பந்தை சேதப்படுத்தினால், 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகள் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்கள் முன்பு, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டியில், திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியதாக அறியப்பட்டது. அப்போது, ஐசிசி சட்ட விதிகளின்படி, ஸ்மித் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை மற்றும் பான்க்ராப்ட் போட்டி சம்பளத்தின் 75 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும் என்ற தண்டனை மட்டுமே கொடுக்கப்பட்டது.

அப்போது, பலரும் இது மிகவும் குறைந்த தண்டனை என கூறினாலும், ஐசிசி தன் விதிகளின்படி இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என கை விரித்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், இதற்கு மூளையாக செயல்பட்ட டேவிட் வார்னருக்கு எந்த தண்டனையும் இல்லை. அவரை பற்றி ஐசிசி கண்டுகொள்ளவே இல்லை.
அதேசமயம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இந்த விவகாரத்தை விசாரித்து வார்னர், ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டும், பான்க்ராப்டுக்கு ஆறு மாதங்களும் தன் கட்டுப்பாட்டில் நடக்கும் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட தடை விதித்தது.
ஐசிசியின் குறைந்த தண்டனை ஒரு தலைபட்சமானது என பலரும் கூறவே, தற்போது தன் விதிகளை மாற்றியுள்ளது ஐசிசி. தற்போது, பந்தை சேதப்படுத்துதல் மூன்றாம் நிலை குற்றமாக கருதப்படும். இதன்படி, 12 தடைப்புள்ளிகள் (SUSPENSION POINTS) வழங்கப்படும். ஐசிசி விதிகள் படி, 12 தடைப்புள்ளிகள் பெற்றால் 6 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒருநாள் போட்டிகள் விளையாட தடை விதிக்கப்படும்.
இதற்கு முன்பு, இது இரண்டாம் நிலை குற்றமாக இருந்தது. அதன்படி, இரண்டு தடைப்புள்ளிகள் மட்டுமே வழங்கப்படும். மேலும், இரண்டு ஒருநாள் போட்டிகள் அல்லது ஒரு டெஸ்ட் போட்டி ஆட தடை விதிக்கப்படும். இந்த தண்டனை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தன் கூட்டத்தில், மேலும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கிப் பேசுதல், அம்பயரை மதிக்காமல் நடந்து கொள்வது மற்றும் தவறான வார்த்தைகளை மைக்கில் கேட்கும்படி பேசுதல் ஆகியவையும் தற்போது குற்றச்செயல்களாக கருதப்படும்.
இதில் குறிப்பாக சமீப காலங்களில், ஸ்டம்ப் மைக்கில் வீரர்கள் பேசுவது தெளிவாக கேட்கும் நிலையில், அவர்கள் தவறான வார்த்தைகளை பேசினால், அது தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிறது. இதை தடுக்கும் நோக்கில் தற்போது, ஸ்டம்ப் மைக் பற்றிய தன் விதிகளையும் மாற்றியுள்ளது. அதன்படி, தவறான வார்த்தைகளை மைக்கில் கேட்கும்படி பேசுதல் இனி குற்றமாகக் கருதப்படும்.
இது மட்டுமின்றி, இந்தக் கூட்டத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட், அதன் வியாபாரங்களை நிலைப்படுத்த உதவுதல், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அமைப்பு, இன்னும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தாவிட்டால், அதன் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்தல் போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.