இந்தியா அபார ஆட்டம்br/6வது ஒருநாள் போட்டியில் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்துடன் நடந்த 6வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடியதால் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை 3-3 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இங்கிலாந்தில் 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்த 5 போட்டிகளில் இங்கிலாந்து 3 போட்டிகளில் வென்று முன்னிலையில் இருந்தது.
இன்னமும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்றிவிடலாம் என்று நினைப்பில் இருந்த இங்கிலாந்து அணி நேற்று 6வது ஒருநாள் போட்டியை சந்தித்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பால் காலிங்வுட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
இங்கிலாந்து வீரர்கள் ஆரம்பத்தில் தடுமாறினர். ஒரு கட்டத்தில் 31 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து இக்கட்டனா நிலையில் இருந்தது. இதனால் அவர்களை 200 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்ற மிதப்பில் இந்திய வீரர்கள் பந்து வீசினர்.
ஆனால் நிலைமை திடீரென தலைகீழாக மாறியது. 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரைட் - ஷா ஜோடி அபாரமாக பேட்டிங் செய்து இந்திய அணியின் பவுலர்களை நிலை குலையச் செய்தது.
இருவரும் 106 ரன்களை சேர்த்தனர். இது அந்த அணிக்கு மிகவும் பலமாக அமைந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரை கேப்டன் டிராவிட், யுவராஜ் சிங்கிடம் கொடுத்து பந்து வீசச் சொன்னார்.
யுவராஜின் நேரமோ என்னவோ அவரது பந்துகளை துவைத்து எடுத்து விட்டார் மஸ்கரின்ஹாஸ். முதல் பந்தில் ரன் வரவில்லை. ஆனால் அடுத்த 5 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி யுவராஜுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
இதன் காரணமாக இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு பெரும் மலைப்பை ஏற்படுத்தி விட்டது. இங்கிலாந்து வீரர் ஷா அபாரமாக விளையாடி 107 ரன்களை குவித்தார். இந்தியா தரப்பில் ஜாகீர், அகார்கர், சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து இறங்கிய இந்திய அணி வலுவான அடித்தளம் அமைத்தது. கங்குலி - சச்சின் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி 150 ரன்களைக் குவித்தனர். சச்சின் 94 ரன்களும், கங்குலி 55 ரன்கள் எடுத்தும் அவுட்டாகினர்.
அதற்கடுத்து வந்த வீரர்கள் எவரும் சரியாக விளையாடவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி 58 பந்துகளில் 83 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலைக்கு தள்ப்பட்டது.
அப்போது தான் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக சேர்க்கப்பட்ட ராபின் உத்தப்பா களம் இறங்கினார். இவருடன் விக்கெட் கீப்பர் டோனி சேர்ந்து அதிரடியாக 60 ரன்கள் குவித்தனர். டோனி 35 ரன்கள் எடுத்து அவுட்டாகி விட்டார்.
அதற்கடுத்து வந்த வீரர்கள் அகார்கர், ஜாகீர்கான் ஆகியோர் ஆட்டமிழந்தாலும், மனம் தளராத உத்தப்பா பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் விளையாடினார்.
கடைசி 6 பந்துகளில் 10 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலை. அப்போது முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் உத்தப்பா. அடுத்த பந்தில் ஜாகீர்கான் தேவையில்லாமல் ரன்அவுட் ஆகினார்.
ரமேஷ் பவார் களமிறங்கினார். உத்தப்பா ஆட்டத்தின் 3வது பந்தில் பவுண்டரி அடித்தார். வெற்றிக்கு 4 ரன்களே தேவை என்ற நிலையில் கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரியை அடித்து இந்திய ரசிகர்களை சந்தோஷத்தில் குதூகலக்கச் செய்தார் உத்தப்பா.
8 பவுண்டரிகளுடன் 33 பந்துகளை மட்டுமே சந்தித்து 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார். ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்
இந்த வெற்றியின் மூலம் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.
வரும் சனிக்கிழமை 7வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்றும். எனவே இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications