டெல்லி : இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷபீர் ரஹ்மான் நான்கு வருடங்கள் முன்பு ஈவ்-டீசிங் செய்துள்ளார். சானியா மிர்சாவின் கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான ஷோயப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் போர்டுக்கு அளித்த புகார் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷபீர் ரஹ்மான் மீது ஏராளமான புகார்கள் இருக்கின்றன. அவருக்கு பல முறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் ரசிகர்கள் சிலரை மிரட்டிய புகரில் நேற்று அவருக்கு ஆறு மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷோயப் மாலிக் அளித்துள்ள புகாரில் நான்கு வருடங்கள் முன்பு வங்கதேசத்தின் தாக்கா நகரில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்கேற்க ஷோயப் மாலிக் வந்துள்ளார். அவருடன் சானியா மிர்சாவும் வந்துள்ளார். அவர் ஷோயப் மாலிக்கிற்கு உற்சாகம் அளிக்க களத்தின் அருகில் சென்றுள்ளார். அப்போது ஷபீர் ரஹ்மான் அவரை கேலியும், கிண்டலும் செய்துள்ளார்.
இது குறித்து ஷோயப் மாலிக் தற்போது எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளார் என வங்கதேச செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. நான்கு வருடங்கள் முன்பு நடந்த ஒரு சம்பவம் குறித்து தற்போது ஏன் புகார் அளிக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது?
சமீப காலமாக, ஷபீர் ரஹ்மான் மீது பல புகார்கள் எழுந்தன. உள்ளூர் தொடரின் போது பார்வையாளர் பகுதியில் இருந்த சிறுவனை தாக்கியது, அணி தங்கியிருந்த அறைக்கு ஒரு பெண்ணை அனுமதி இல்லாமல் அழைத்து வந்தது, பேஸ்புக்கில் ரசிகரை மிரட்டியது, சக வீரர் ஒருவரை தாக்கியது என எராளமான புகார்கள் உள்ளன. உச்சகட்டமாக அவர் மனைவியே சில நாட்கள் முன்பு அவர் தன்னை கொடுமைபடுத்துவதாக புகார் அளித்துள்ளார்.
இதுவரை தண்டனைகளால் 1.5 கோடி வங்கதேச மதிப்பிலான வருமானத்தை அவர் இழந்துள்ளார். தற்போது ஆறு மாத காலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவதில் இருந்து தடையும் பெற்றுள்ளார். இனியாவது திருந்துவாரா?