டெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகள் வென்று கொடுத்த உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் மீது காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங். சுரேஷ் ரெய்னா ஆகியோரது பெயர்களும் அந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
நேற்று ஹர்பஜன் சிங்குடைய சமூக வலைதள பக்கத்தில் வேடிக்கை என நினைத்து அவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோ இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளது. என்ன நடந்தது?

2024 உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடர் என்ற முன்னாள் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் கேப்டன்சியில் இந்தியா சாம்பியன்ஸ் என்ற அணி பங்கேற்றது. அந்த அணியில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா போன்ற இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விளையாடினர். இந்த தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி வெற்றியும் பெற்றது.
ஆனால், 40 வயதை எட்டிய நிலையில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் விளையாடியதால் தங்கள் உடல் சோர்வடைந்ததை வெளிப்படுத்தும் வகையில் பாலிவுட் பாடல் ஒன்றிற்கு தங்கள் கால்களை இழுத்து, இழுத்து நடந்து வருவது போல நடனமாடினர். தங்களின் கை, கால்கள் மிகவும் சோர்வுற்று இருப்பதாகவும், வலியுடன் இருப்பதாகவும் குறிப்பிட அவ்வாறு செய்ததாக அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால், அது நடப்பதில் சிரமம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது போல இருப்பதாக மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் சார்பில் கண்டனங்கள் குவிந்தன. இந்திய பாராலிம்பிக் சங்கமும் கடுமையான வார்த்தைகளால் விளாசி இருந்தது. இந்த நிலையில், ஹர்பஜன் சிங் அந்த வீடியோவை நீக்கியதுடன், மன்னிப்பும் கேட்டிருந்தார்.
"நாங்கள் எங்களது உடல் நிலையை பற்றி சொல்வதற்காகவே அந்த வீடியோவை வெளியிட்டோம். யாருடைய மனதையும் புண்படுத்துவதோ, காயப்படுத்துவதோ எங்கள் நோக்கமில்லை. நாங்கள் தவறு செய்ததாக யாராவது நினைத்தால், உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த பிரச்சனையை இங்கேயே முடித்துக் கொள்வோம்" என்று கூறியிருந்தார்.
அத்துடன் இந்த பிரச்சனையை முடிவுக்கு வந்ததாக அனைவரும் எண்ணிய நிலையில். புது டெல்லியில் உள்ள அமர் காலனி காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது புகார் அளித்து இருப்பது மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மேம்பாட்டு தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குனர் அர்மான் அலி ஆவார். அந்த ஒரு வீடியோவால் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இந்திய அணியின் ஜாம்பவான்கள் சிக்கலில் உள்ளனர்.