ஹெல்மெட் அணிந்து களம் குதித்த அம்பயர் ஜான்.. திண்டுக்கல் ரஞ்சிப் போட்டியில் அடிபட்டவர்!
கான்பெரா: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக இன்று கான்பெராவில் தொடங்கிய இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டியில் நடுவர் ஜான் வார்ட் ஹெல்மெட் போட்டபடி பணியாற்றுகிறார்.
கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேன்களும் மட்டும்தான் ஹெல்மெட் அணிந்து பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று மிக வித்தியாசமாக நடுவர் ஜான் வார்ட் ஹெல்மெட் போட்டு நின்றதைப் பார்த்து ரசிகர்கள் கலகலப்பாகினார்கள்.
கான்பெராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டியில்தான் இந்த காட்சியைக் காண முடிந்தது.

திண்டுக்கலில் நடந்த அந்த சம்பவம்
திண்டுக்கலில் நடந்த ரஞ்சிப் போட்டியின்போது ஜான் வார்ட் நடுவராகப் பணியாற்றினார். அப்போட்டியில் தமிழ்நாடும், பஞ்சாபும் மோதின. அப்போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து ஜான் வார்ட் தலையைத் தாக்கியதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து விட்டார்.

பரீந்தர் ஸ்ரன் போட்ட பந்து
அந்த பந்தை வீசியவர் தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வேகப் பந்து வீச்சாளர் பரீந்தர் ஸ்ரன் ஆவார் என்பது சுவாரஸ்யமான ஒன்றாகும்.

முன்னெச்சரிக்கையாக
அந்த சமயத்தில் நல்லவேளையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. இதனால்தான் இன்றையப் போட்டியில் அவர் முன்னெச்சரிக்கையாக ஹெல்மெட் போட்டுக் கொண்டு வேலை பார்க்கிறார்.

விஜய் ஹஸாரே போட்டியிலும்
சர்வதேச போட்டியில் அம்பயர் ஹெல்மெட் போடுவது இதுதான் முதல் முறை என்றாலும் கூட இந்தியாவில் விஜய் ஹஸாரே தொடரின்போது சமீபத்தில் பெங்களூரில் நடந்த போட்டியின்போது நடுவர் பாஸ்சிம் பதக் ஹெல்மெட் போட்டு பணியாற்றினார்.

அம்பயர்கள் பாதுகாப்பும் முக்கியம் அமைச்சரே
வீரர்களைப் போலவே அம்பயர்களின் பாதுகாப்பும் முக்கியம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டபல் ஏற்கனவே கூறியுளார். இதன்படி தற்போது ஆஸ்திரேலிய நடுவர் ஜான் ஹெல்மெட்டைக் கையில் எடுத்துள்ளார்.
இது தொடர் கதையாகுமா...!


Click it and Unblock the Notifications