
பகலிரவு டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் இன்றைய தினம் துவங்கி வரும் 28ம் தேதி வரையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. 1.30 லட்சம் அமரும் வசதி கொண்ட இந்த மைதானம் மூன்றாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு இன்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

வெல்லும் கட்டாயம்
இந்த போட்டி தினந்தோறும் பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இதையொட்டி இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

பனிப்பொழிவு குறித்து கவலை
பகலிரவு போட்டியாக விளையாடப்படுவதால் பிட்ச் குறித்தும் பனிப்பொழிவு குறித்தும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தங்களது கவலையை தெரிவித்து வருகின்றன. அணியின் பௌலர்கள் ஆன்டர்சன் மற்றும் ஆர்ச்சர் இந்த போட்டியிலும் மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ் வெல்வது சிறப்பு
இந்த பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்வது சிறப்பானதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4 மற்றும் 5வது நாட்களில் பேட் செய்வது மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால் முதலில் பேட் செய்யும் அணி சிறப்பான ஸ்கோரை எடுப்பதன்மூலம் வெற்றிக்கு வழி செய்ய முடியும்.

பாதகமாக அமையும் பனிப்பொழிவு
கடந்த அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் அதிகமாக சொதப்பி தோல்வியை கண்டுள்ளது இந்திய அணி. ஆயினும் இது சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஆயினும் பனிப்பொழிவு இந்திய அணிக்கும் நெருக்கடியையே கொடுக்கும். இது அஸ்வின் மற்றும் அக்சர் படேல் போன்ற ஸ்பின்னர்களுக்கும் பாதகமாகவே அமையும் சூழல் உள்ளது.


Click it and Unblock the Notifications











