மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது செய்த விஷயம் ஒன்றால் நொந்து போன பிசிசிஐ, மற்ற வீரர்களும் அதே போல மாறிவிடுவார்களோ என்ற அச்சத்தில் புதிய விதியை வகுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஒரு கிரிக்கெட் வீரர் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐந்து முதல் பத்து பைகளை எடுத்துச் செல்வார்கள். கிரிக்கெட் உபகரணங்கள் மட்டுமே மூன்று அல்லது நான்கு பைகள் வரை இருக்கும். வேகப் பந்துவீச்சாளர்களாக இருந்தால் ஷூ-க்களுக்கு மட்டுமே ஒரு பையை எடுத்துச் செல்வார்கள்.

அதிகபட்சமாக 10 பைகளை எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஒரு மூத்த வீரர் 27 பைகளை எடுத்துச் சென்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவற்றின் மொத்த எடை 250 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததாகவும், அவற்றை ஒவ்வொரு விமான நிலையத்திலும் எடுத்துச் சென்று வருவதற்கு மட்டும் பிசிசிஐ பல லட்சங்களை செலவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தான் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு கட்டுப்பாடு ஒன்றை விதித்திருந்தது. இனி இந்திய வீரர்கள் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு அதிகபட்சம் 150 கிலோ எடையிலான பைகளை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என்ற விதியை அமல்படுத்தி இருந்தது. உள்நாட்டு தொடராக இருந்தால் 120 கிலோ எடை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் எனவும் கூறி இருந்தது.
அதிகபட்சமாக ஒரு வீரர் பத்து பைகளை மட்டுமே எடுத்துச் செல்லலாம் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதற்கான காரணம் அந்த நட்சத்திர வீரர் தான் என கூறப்படுகிறது. மேலும் அந்த நட்சத்திர வீரர் எடுத்துச் சென்ற 27 பைகளில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பைகளும் அடங்கும்.
அந்த மூத்த வீரர் செய்ததைப் பார்த்து வேறு ஒரு வீரரும் அதே போல அதிக பைகளை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது இப்படியே சென்று கொண்டிருந்தால் அனைத்து வீரர்களும் அதிக பைகளை எடுத்துச் செல்ல முயற்சிப்பார்கள் என்பதால் பிசிசிஐ அதிரடியாக விதிமுறையை வகுத்து இருக்கிறது. இனி ஒவ்வொரு வீரரும் அதிகபட்சம் 10 பைகளையும் 150 கிலோவுக்கான எடை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்ற விதியை பிசிசிஐ வகுத்து இருக்கிறது.