சென்னை: பாகிஸ்தானில் தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதுபோன்ற நிலை ஏற்படாதது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ டிவிக்கு அளித்த பேட்டியில் பொல்லாக் கூறியுள்ளது: வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் காலத்தில் இருந்து தொடங்கினால்கூட, அதன்பிறகு ஷோயிப் அக்தர், முகமது ஷமி, வகாப் ரியாஸ் என வரிசையாக உலக தரம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.

அதேநேரம், எல்லை நாடான இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ச்சியாக வரவில்லை. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்து வீசும் திறமை உள்ளவர்கள். அதேநேரம், இந்தியாவிலோ வேகப்பந்து பவுலர்கள் வளரவில்லை.
இந்தியர்களின் மரபணுவிலேயே அதுபோல உணர்வு கலந்துவிட்டதா, அல்லது, அவர்கள் சாப்பிட்டு வளரும் நடைமுறையில் சிக்கல் உள்ளதா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மரபணுதான் காரணமாக இருக்க முடியும். வலுவான தசைகள், தீவிர உடற்பயிற்சி, டெக்னிக்குகள் போன்றவைதான் சிறந்த வேகப்பந்து வீச்சாளரை உருவாக்கும்.
வருண் ஆரோன் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தற்போதைய இந்திய அணியில் வேகமாக பந்து வீசக்கூடியவர்கள். முன்பு ஸ்ரீநாத் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தார். ஆனால் தொடர்ச்சியாக நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை இந்தியா உருவாக்கவில்லை. உமேஷ் யாதவ் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். அவருக்கு கவுன்சலிங் தர வேண்டும். இவ்வாறு பொல்லாக் கூறியுள்ளார்.