
பும்ரா ஃபிட்னஸ்
சுமார் 6 மாத காலமாக ஓய்விலேயே இருந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை மூலமாக மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவரின் பெயர் இடம் பெறவில்லை. இன்னும் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் பெயர் சேர்க்கப்படவில்லை எனக்கூறப்பட்டது.

குவியும் விமர்சனங்கள்
இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நேரடியாக ஐபிஎல் தொடருக்கு தான் வருவார் என்பது உறுதியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 31ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தேசத்திற்காக விளையாட தயாராக இல்லை எனக்கூறும் பும்ரா, அதிக பணம் கொட்டும் ஐபிஎல்-க்கு மட்டும் தயாராகிவிடுவார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆகாஷ் சோப்ரா கண்டனம்
இந்நிலையில் இதில் பும்ராவுக்கு ஆதரவாக ஆகாஷ் சோப்ரா களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து பும்ராவுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அவர் அப்படியே 2 டெஸ்ட் போட்டிகளுக்கும், ஒருநாள் போட்டிக்கும் வந்திருந்தாலும் கூட என்ன செய்துவிடுவார்கள்? அவரை விளையாட வைக்காமல் ஓய்வு கொடுத்தாக வேண்டும். ஏனென்றால் அவர் நமது தேசத்தின் பெரும் சொத்து. மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

என்ன காரணம்
நீண்ட நாட்களாக விளையாடாமல் இருக்கும் ஒரு வீரர், முதலில் பழைய ஃபார்முக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஓய்வு கொடுத்தால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராக முடியும். பலரும் அவர் ஐபிஎல்-க்காக செயல்படுகிறார் என விமர்சிக்கின்றனர். ஆனால் அவரை அப்படியே யாரும் இங்கு விட்டுவிடவில்லை. பிசிசிஐ ஸ்பெஷல் ஏற்பாட்டினை செய்து தான் உள்ளது.

அணிகளின் எண்ணம்
பும்ராவிடம் நேரடி தொடர்பில் இருக்கும் வகையில் மருத்துவர்களை நியமித்துள்ளது. அவர்கள் பும்ராவின் பணிச்சுமையை பார்த்துக்கொள்வார்கள். எனவே எங்கு அவரை விட வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். இதுமட்டுமல்லாமல் எந்தவொரு ஐபிஎல் அணியுமே ஒரு வீரரை தேசத்திற்காக விளையாட வேண்டாம் எனக்கூறாது. நாடு தான் முக்கியம் என்று தான் யாராக இருந்தாலும் நினைப்பார்கள் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications