மும்பை: பாகிஸ்தானில் நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு செல்லப் போவதில்லை என பிசிசிஐ அறிவித்து உள்ளது. எனவே, இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானில் நடத்தாமல் வேறு நாட்டில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாமல் போனதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி இருக்கிறார். பாகிஸ்தானில் சமீபத்தில் கூட குண்டு வெடிப்பு நடந்தது என்றும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து தலையிட்டு வருகிறது என்றும் அவர் விளாசி இருக்கிறார்.

2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் உலகின் 8 முன்னணி அணிகள் பங்கேற்க உள்ளன. ஒருநாள் தொடராக நடைபெற உள்ள இந்த தொடர், உலகக் கோப்பைக்கு அடுத்து முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக பாகிஸ்தானில் ஐசிசி தொடர் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. நீண்ட காலத்திற்குப் பின் பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.
2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காக மைதானங்களை புதுப்பிக்கும் வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டது. அதற்காக பல நூறு கோடிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு செலவிட்டு இருக்கிறது. இந்த நிலையில். இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்லாமல் போனால் அது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக பார்க்கப்படும்.
எனினும், இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தினால் வருவாய் இழப்பில் இருந்து தப்பிக்கலாம். அதே நேரத்தில் தங்கள் கவுரவத்தை விட்டுக் கொடுத்து, இந்தியா ஆடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஒப்புக்கொள்ள மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு எதிர்ப்பு மனநிலையில் உள்ளது.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்தியா கடைசி நேரத்தில் இவ்வாறு செய்வதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஆனால், ஆகாஷ் சோப்ரா இதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என கூறி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்து இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் தங்களை தாங்களே தான் குற்றம் சுமத்திக் கொள்ள வேண்டும். நான் சமீபத்தில் கூட பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததாக செய்தியில் படித்தேன். மேலும், பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்திலும் தலையிட்டு வருகிறது." என்றார்