மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் 600-க்கும் மேற்பட்ட ரன்கள், தன் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றது, சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பான ஆட்டம் என கலக்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இது உலகக்கோப்பை அணி இல்லை என முன்நாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிரடியாக கூறி இருக்கிறார்.
"ஒரு வீரர் இந்திய அணியில் இடம்பிடிக்க இதைவிட வேறு என்னதான் செய்ய வேண்டும்?. உலகக்கோப்பைக்குள் ஸ்ரேயாஸ் இந்திய அணியில் இடம் பிடிப்பார்" என்று ஆகாஷ் சோப்ரா அதற்கு புது காரணம் ஒன்றையும் கூறி இருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், நல்ல ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் பிரதான அணியில் மட்டுமின்றி, 5 பேர் கொண்ட ரிசர்வ் வீரர்கள் பட்டியலில்கூட இடம்பெறவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இல்லாதது ஒரு பெரிய கதை. அவர் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? ஐபிஎல் தொடரில் 600-க்கு மேல் ரன் அடித்து, அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். சையத் முஷ்டாக் அலி டிராபி, ரஞ்சி டிராபி என அனைத்திலும் ரன் குவித்தார், சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்தார். ஒரு மனிதனாக இதைவிட வேறு என்ன செய்துவிட முடியும்?" என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
ஆசியக் கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் புறக்கணிக்கப்பட்டாலும், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"இது வெறும் ஆசியக் கோப்பைக்கான அணிதான். இதை வைத்து உலகக் கோப்பையைத் தீர்மானிக்க வேண்டாம். இந்தத் தொடருக்குப் பிறகு சுமார் 15 டி20 போட்டிகள் உள்ளன. அதற்குள் உலகம் மாறிவிடும். ஸ்ரேயாஸ் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் ரன் குவித்தால், விரைவில் அவர் அணிக்குத் திரும்புவார். 2026 டி20 உலகக் கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இடம்பெறுவார் என்று என் மனம் உறுதியாகச் சொல்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.
ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்தத் தொடர்களைப் பயன்படுத்தி ஸ்ரேயாஸ் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயரை பிரதான அணியில் எடுக்காதது ஒருபுறம் இருந்தாலும், ரிசர்வ் வீரர்கள் பட்டியலில்கூட அவரது பெயரைச் சேர்க்காததுதான் தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியதாக சோப்ரா குறிப்பிட்டார். "ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் துருவ் ஜுரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் இருக்கும்போது, அங்கே ஸ்ரேயாஸுக்கு ஒரு இடத்தைக் கொடுத்திருக்கலாம். அதையும் செய்யாதது, ஸ்ரேயாஸின் எதிர்காலம் குறித்து எந்தத் தெளிவான அறிகுறியையும் அளிக்கவில்லை. இது மிகவும் குழப்பமாக இருக்கிறது," என்று சோப்ரா தனது கருத்தைப் பதிவு செய்தார்.