சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் வெற்றிக்கு காரணம் 'பிக்சிங்'.. மாஜி வீரர் பகீர் குற்றச்சாட்டு!
லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பைனலுக்கு வருவதற்கு மேட்ச் பிக்சிங்தான் காரணம் என்று அந்த அணி முன்னாள் வீரர் அமிர் சொகைல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக பங்களிப்பை அளித்து பைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவிடம் லீக் ஆட்டத்தில் படு மோசமாக ஆடிய பாகிஸ்தான், பிறகு இலங்கை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து தோற்கடித்து பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.
அதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக அரையிறுதியில் இங்கிலாந்து ஏன் அப்படி மெதுவாக ஆடியது என்பது இன்னும் பல ரசிகர்களுக்கு புரியாத புதிர்தான்.

குற்றச்சாட்டு
இந்த நிலையில்தான், சொகைல் புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் ஏற்கனவே பல முறை சூதாட்ட புகார்களில் சிக்கிய அணி என்பதால் சொகைல் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அன்னிய சக்திகள்
பாகிஸ்தான் நாட்டின் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, அமிர் சொகைல் கூறுகையில், வெளியிலுள்ள சக்திகள் மூலமாகத்தான் பாகிஸ்தான் பைனலுக்குள் போயுள்ளது என பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தூக்கி வரப்பட்டுள்ளீர்கள்
நீங்கள் நன்றாக விளையாடினீர்கள் என்றால் நாங்கள் பாராட்டுவோம். ஆனால் அப்படியில்லை என்றால் நாங்கள் விமர்சிக்கத்தான் செய்வோம் என கூறியுள்ளார் சொகைல். இந்த வெற்றிக்காக நீங்கள் கொண்டாட தேவையில்லை. இந்த வெற்றி இடத்திற்கு நீங்கள் தூக்கி வரப்பட்டுள்ளீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுவாரசியத்தை அதிகரிக்க
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சமீபகாலத்தில் மோதிக்கொள்ளவில்லை. அரசியல் காரணங்களால் போட்டிகள் தவிர்க்கப்படுகின்றன. இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கிய போட்டித்தொடரின் பைனலில் இவ்விரு அணிகளும் மோதும் சூழல் உருவாகியுள்ளது சில கிரிக்கெட் வல்லுநர்களுக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக மோதிய இந்தியா தவிர்த்த, பிற அணிகள் வேண்டுமென்றே தோற்றதை போன்ற தோற்றத்தைதான் சொகைலும் உருவாக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications