
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே பெரும் பரபரப்பு இருக்கும். லேசான சீண்டல்கள் இருக்கும். அதில் மறக்க முடியாத நிகழ்வு ஆமிர் சோஹைல் - வெங்கடேஷ் பிரசாத் இடையே நடைபெற்றது. ஆமிர் சோஹைல் சீண்டலுக்கு அடுத்த பந்திலேயே பதிலடி கொடுத்தார் வெங்கடேஷ் பிரசாத்.

1996 உலகக்கோப்பை
90களில் பாகிஸ்தான் பலமான அணியாக இருந்தது. 1996 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கால் இறுதிப் போட்டியில் மோதின. பெங்களூருவில் அந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தியா ரன் குவிப்பு
இந்திய அணி அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 287 ரன்கள் குவித்தது. நவ்ஜோத் சிங் சித்து 93 ரன்கள் குவித்து இருந்தார். அஜய் ஜடேஜா 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர உதவி செய்தார்.

பாகிஸ்தான் அதிரடி
அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் ஆமீர் சோஹைல் - சயீத் அன்வர் துவக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆடினர். இருவரும் 10 ஓவர்களில் 84 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். சயீத் அன்வர் விக்கெட் வீழ்ந்த நிலையிலும் இந்திய அணி அழுத்தத்தில் தான் ஆடி வந்தது.

ஆமிர் சோஹைல் சீண்டல்
அப்போது வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தை ஆமிர் சோஹைல் பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது பாகிஸ்தான் அணி நல்ல நிலையில் இருந்தது. அதனால், வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்தை சீண்டினார் ஆமிர் சோஹைல்.

கடும் கோபம்
தான் பவுண்டரி அடித்ததை சுட்டிக் காட்டி, உன்னை பவுண்டரிக்கு விரட்டுவேன் என கெத்தாக கூறி உள்ளார். கைகளை அவர் காட்டிய விதம், அவர் பேசிய விதம் ஆகியவற்றால் கடும் கோபம் அடைந்தார் வெங்கடேஷ் பிரசாத்.

பதிலடி கொடுத்தார்
அடுத்த பந்தும் அதே போலவே வீசினார் அவர். பந்துவீச்சாளரை சீண்டி விட்டோம் என அதிக தன்னம்பிக்கையில் இருந்த ஆமிர் சோஹைல் பந்தை தவறவிட்டார். பந்து ஆஃப் சைடு ஸ்டம்ப்பை தகர்த்தது. அப்போது வெங்கடேஷ் பிரசாத் அவரை வெளியேறுமாறு சைகை காட்டி பதிலடி கொடுத்தார்.

கடந்த 24 வருடத்தில்..
இந்தியா - பாகிஸ்தான் மோதலில் மிகச் சிறந்த பதிலடியாக வெங்கடேஷ் பிரசாத்தின் அந்த விக்கெட் கருதப்படுகிறது. கடந்த 24 வருடத்தில் தான் எங்கே சென்றாலும் அந்த சம்பவம் பற்றி என்னை கேட்காதவர்களே இல்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார் வெங்கடேஷ் பிரசாத்.

இந்தியா வெற்றி
மேலும், ஆமிர் சோஹைல் தன்னை சீண்டிய போது தன் இரத்தம் கொதித்ததாகவும், உடனே ஒரு விக்கெட் வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்ததாகவும் கூறினார் வெங்கடேஷ் பிரசாத். அந்தப் போட்டியில் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications











