நார்தாம்ப்டன்: நான்கு ஆண்டுகள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பியுள்ள தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணியை கதிகலங்க வைத்தார். இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் (WCL) தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தளித்துள்ளார். 41 வயதான டி வில்லியர்ஸ், பேட்டிங்கில் மட்டுமல்லாது ஃபீல்டிங்கிலும் அதகளம் செய்ய, தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு, 9வது ஓவரில் நான்காவது வீரராக களமிறங்கினார் கேப்டன் டி வில்லியர்ஸ். வந்தது முதல் இந்தியா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த அவர், மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பந்தை விரட்டினார். வெறும் 30 பந்துகளைச் சந்தித்த அவர் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 61 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது.
பேட்டிங்கில் மட்டுமல்லாது, தனது டிரேட்மார்க் ஃபீல்டிங்கிலும் டி வில்லியர்ஸ் அசத்தினார். இந்தியா அணியின் அதிரடி வீரர் யூசுப் பதான், இம்ரான் தாஹிர் பந்துவீச்சை லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்குபறக்கவிட முயற்சித்தார். பவுண்டரி லைன் அருகே ஓடிவந்த டி வில்லியர்ஸ், பந்தை லாவகமாகப் பிடித்தார். தான் பவுண்டரி கோட்டைத் தாண்டுவதை உணர்ந்த அடுத்த நொடி, பந்தை மேலே தூக்கிப்போட, அருகே ஓடிவந்த சாரெல் எர்வீ அதனைப் பிடித்து அசத்தினார். இந்த அட்டகாசமான டேக்-டீம் கேட்ச், போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.
மிகப்பெரிய இலக்கைத் துரத்திய இந்தியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பவர்பிளே முடிவதற்குள் 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் யுவராஜ் சிங், ஒரு சிறிய காயம் காரணமாக பேட்டிங் செய்ய வராதது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி மட்டும் 37 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா அணி 18.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. அப்போது ஆடுகளத்தில் மின்விளக்கு பிரச்சனை ஏற்பட்டதால் போட்டி முடித்துக் கொள்ளப்பட்டது. டிஎல்எஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா சாம்பியன்ஸ் அணி இந்த தொடரில் ஆடிய முதல் போட்டியிலேயே படுதோல்வி அடைந்தது. பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய ஏபி டி வில்லியர்ஸ், ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி தொடரில் வலுவான நிலையில் உள்ளது.