சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர்
2011இல் ஐபிஎல் தொடருடன் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரும் வருடா வருடம் நடந்து வந்தது. ஒவ்வொரு டி20 லீக்கிலும் சிறந்து விளங்கும் உள்ளூர் அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும். 2011ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் அந்த தொடரில் ஆடியது.
டிவில்லியர்ஸ் காயம்
அந்த தொடரில் அரை இறுதிக்கு முன்னேற வேண்டிய போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியாவின் ரெட்பேக்ஸ் அணியை சந்தித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அந்தப் போட்டியில் ஆட வேண்டிய ஏபி டிவில்லியர்ஸ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
அருண் கார்த்திக் உள்ளே வந்தார்
அவருக்கு பதிலாக யாரை ஆட வைக்கலாம் என்ற குழப்பம் ஏற்பட்டது. டிவில்லியர்ஸ் அந்த தொடர் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்து வந்ததால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது அணியில் இருந்த உள்ளூர் வீரரான அருண் கார்த்திக் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.
தென்னாப்பிரிக்கா சென்றார்
அவரை தேர்வு செய்தனர். அவர் அணியை வெற்றி பெற வைப்பார் என நம்பிக்கை கூறினார் ஏபி டிவில்லியர்ஸ். பின் அவருக்கு கை விரலில் முறிவு ஏற்பட்டு இருந்ததால் அவர் அவசரமாக தென்னாப்பிரிக்கா கிளம்பி சென்று விட்டார்.
அந்தப் போட்டி
அந்தப் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கடைசி ஓவரில் ஸ்ரீநாத் அரவிந்த் மற்றும் அருண் கார்த்திக் ஆடினர். இருவருமே சர்வதேச அனுபவம் அதிகம் இல்லாத உள்ளூர் வீரர்கள்.
கடைசி ஓவர்
கடைசி ஓவரில் 4 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஸ்ரீநாத் அரவிந்த் 4 பந்துகளில் ஒரு ஃபோர், இரண்டு சிங்கிள், ஒரு லெக் பை ரன் எடுத்தார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது பெங்களூர்.
சிக்ஸ் அடித்த கார்த்திக்
அப்போது அருண் கார்த்திக் களத்தில் இருந்தார். அவர் இருக்க வேண்டிய இடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் இருந்தால் என்ன செய்வாரோ, அதை செய்தார். ஆம், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து மிரட்டினார். பெங்களூர் அணி அதிரடி வெற்றி பெற்றது. அது அந்த அணியின் சிறந்த வெற்றிகளில் ஒன்றாக இன்றும் உள்ளது.
மெசேஜ் அனுப்பிய டிவில்லியர்ஸ்
அந்தப் போட்டிக்கு பின் ஏபி டிவில்லியர்ஸ் மறக்காமல் அருண் கார்த்திக்குக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். "நீ அணியை வெற்றி பெற வைப்பாய் என எனக்கு தெரியும்" என அந்த மெசேஜில் குறிப்பிட்டு இருந்தார் டிவில்லியர்ஸ். அது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார் அருண் கார்த்திக்.
என்ன சொன்னார் அருண் கார்த்திக்?
டிவில்லியர்ஸ் காயம் அடைந்த பின் தான் அணியை வெற்றி பெற வைப்பேன் என கூறியதாகவும், அதே போல போட்டிக்கு பின்னரும் தனக்கு மெசேஜ் அனுப்பி தான் அணியை வெற்றி பெற வைப்பேன் என தனக்கு தெரியும் என டிவில்லியர்ஸ் நம்பிக்கை மெசேஜ் அனுப்பியதாகவும் கூறினார். அந்த மெசேஜை தான் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினார் அருண் கார்த்திக்.