துபாய் : கடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தன்னுடைய அணி மற்றும் ரசிகர்களுக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் வலிமையாகவும் சிறப்பாகவும் ஆர்சிபி வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ப்ளே -ஆப் சுற்றிற்கு முன்னேறிய ஆர்சிபி அணி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அந்த அணியின் ஏபி டீ வில்லியர்ஸ் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 5 அரைசதங்களை அடித்து அணியில் தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலிக்கு அடுத்ததாக 454 ரன்களுடன் அதிக ரன்களை குவித்த 3வது வீரராக தொடரை நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணி மற்றும் ரசிகர்களுக்கு டீ வில்லியர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த ஆண்டு ஆர்சிபி அணியில் அனைவரும் இணைந்து மிகவும் உற்சாகமான மனநிலையுடன் விளையாடியதாக தெரிவித்துள்ளார். இந்த நினைவுகள் நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி வலிமையாகவும் சிறப்பாகவும் வளர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.