பிர்மிங்காம்: ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்களுக்கான 2025 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி, தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான 12வது லீக் போட்டியில், டிவில்லியர்ஸ் வானவேடிக்கை காட்டினார். வெறும் 39 பந்துகளில் சதத்தை எட்டிய அவர், மொத்தமாக 46 பந்துகளை மட்டுமே சந்தித்து 15 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது முந்தைய ஆட்டத்தில், இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக 41 பந்துகளில் சதம் விளாசி 116 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஜேஜே ஸ்மட்ஸ் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்தது. டிவில்லியர்ஸ் தனது பங்கிற்கு 123 ரன்கள் எடுக்க, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஸ்மட்ஸ் 53 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர்களின் அதிரடியால், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் தரப்பில், பீட்டர் சிடில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பான ஃபார்மில் இருக்கும் டிவில்லியர்ஸ், இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக 63 ரன்கள் விளாசினார். தற்போது தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்துள்ளதன் மூலம், இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 305 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அடுத்து 242 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி விளையாடியது. அந்த அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.