டெல்லி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், நான் பேசாமல் இந்தியக் குடியுரிமை வாங்கி விடலாம் என்று கருதுகிறேன். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து பேசலாம்னு பார்க்கிறேன் என்று ஜோக் அடித்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக நேரம் கழிக்கிறீர்களே, பேசாமல் இந்தியக் குடியுரிமை வாங்கி விட வேண்டியதுதானே என்ற கேள்விக்குத்தான் இப்படி பதிலளித்தார் ஏலியன் என்ற செல்லப் பெயருடன் ரசிகர்களால் அழைக்கப்படும் டிவில்லியர்ஸ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடி வருகிறார் டிவில்லியர்ஸ். அவரும் கேப்டன் விராத் கோஹ்லியும் சேர்ந்து கெய்ல் செய்ய வேண்டி ரன் குவிப்பை செய்து வருகின்றனர். இருவரும் சரமாரியாக ரன்களைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

டிவில்லியர்ஸ் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 538 ரன்களைக் குவித்துள்ளார். இதில் நான்கு அரை சதமும், ஒரு சதமும் அடக்கம். மறுபக்கம் கோஹ்லி 3 சதத்துடன் 700 ரன்களைத் தாண்டி ஓடி விட்டார்.
இந்த நிலையில் பெங்களூர் அணியைச் சேர்ந்த டிஜிட்டல் அணியின் உறுப்பினரான நாக்ஸ் என்பவர் டிவில்லியர்ஸிடம் பேசுகையில், நீங்கள் ஏன் பேசாமல் இந்தியக் குடியுரிமை வாங்கக் கூடாது? பெரும்பாலான நேரத்தை இந்தியாவில்தான் கழிக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு சிரித்தபடி பதிலளித்த டிவில்லியர்ஸ், நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பேசாமல் பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து விட வேண்டியதுதான் என்றார்.
ஜோக்தான்.. ஆனால் நிறைய இந்தியர்கள் இதை நிச்சயம் விரும்புவார்கள்!