மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது என கிரிக்கெட் ஜாம்பவான் ஏ பி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி குறித்து பேசிய அவர் சொந்த மண்ணில் விளையாடுவதால் அதிக நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்படும் என்று குறிப்பிட்ட டிவிலியர்ஸ் அதை மட்டும் சமாளித்து விட்டால் இந்திய அணி உலக கோப்பையை வென்று விடும் என்று கூறினார்.

இது தொடர்பாக பேசிய அவர் சொந்த மண்ணில் விளையாடுகிறோம் என்ற நெருக்கடி இல்லாமல் அவர்கள் தங்களைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு விளையாட வேண்டும். என்னைக் கேட்டால் இந்திய அணியில் எந்த பிரச்சனையுமே இல்லை. பயமின்றி விளையாடுங்கள். உங்களால் எதை கட்டுப்படுத்த முடியுமோ அதை மட்டுமே கட்டுப்படுத்துங்கள். அச்சமின்றி மட்டும் நீங்கள் விளையாடி விட்டால் இறுதிச்சுற்று வரை இந்திய அணி முன்னேறி கோப்பையை வெல்ல கூட வாய்ப்பு இருக்கிறது.
உலககோப்பைக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் இடம் பெற்று இருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி. ஏனென்றால் நான் மிகப்பெரிய சூரியகுமார் யாதவின் ரசிகன். நான் எப்படி விளையாடுவேனோ அதேபோல அவர் விளையாடுகிறார். எனினும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆட்ட முறையை அவர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவர் மனதளவில் சிறிய ஒரு மாற்றத்தை மேற்கொண்டாலே ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட முடியும்.
அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது .உலகக் கோப்பை தொடரில் ஆரம்பகால போட்டிகளில் சூரியகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. எனினும் உலகக்கோப்பை என்பது நீண்ட நெடிய தொடர். இதனால் அவருக்கு சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். சூரியகுமார் போலவே சஞ்சு சாம்சனும் திறமையான வீரர்.
சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக அவர் 92 ரன்கள் அடித்தது எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டிய அனைத்து திறமையும் சஞ்சு சாம்சன் இடம் இருக்கிறது. அவரும் மனதளவில் சில மாற்றத்தை மேற்கொண்டு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று டிவிலியர்ஸ் அறிவுரை வழங்கினார்.