ஆக்லாந்து: ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் கிடைத்த ரன் அவுட்டை கோட்டை விட்டார் டி வில்லியர்ஸ். பந்தை பிடிக்காமல் ஸ்டம்பை வெறுங்கையால் அடித்ததால் நியூசி. வீரர் ஆன்டர்சன் தப்பினார்.
43 ஓவர்களில் 298 ரன்கள் அடிக்க வேண்டிய நெருக்கடியில் ஆடிய நியூசிலாந்து, 32வது ஓவரில் 204 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது, அதிரடி வீரர் ஆன்டர்சன் மற்றும் எலியட் ஆடிக் கொண்டிருந்தனர். ஸ்டெயின் பந்து வீச்சில் எலியட் ஆப் சைடில் தட்டி விட்டார். அதற்குள் பாதி பிட்ச் ஓடிவிட்டார் ஆன்டர்சன்.

எனவே பந்து வீச்சாளர் முனையிலுள்ள ஸ்டம்பில் பந்தை எறிந்தால் ஆன்டர்சனை ரன் அவுட் ஆக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டம்பின் அருகே ஓடிவந்தார், தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ். பந்து அவரது கையில் சிக்கியபோது, ஆன்டர்சன் வெகு தொலைவில் நின்றார். ஆனால், பந்து வேகமாக வந்ததால், டி வில்லியர்ஸ் கையில் இருந்து பந்து நழுவியது. வெறும் கையிலேயே ஸ்டம்பை அடித்துவிட்டார் டி வில்லியர்ஸ்.
ஆனால், அதன்பிறகு, குஷ்டியடித்து பந்தை பிடித்து மீண்டும் ஸ்டம்பில் அடித்தார். அப்போதும், ஆன்டர்சன் கிரீசை வந்து அடையவில்லை. இருப்பினும், இது 3வது நடுவர் ரிவியூவ்வுக்கு போனது. வெறும் கையால் ஸ்டம்பை அடித்தபோது, பெய்ல்ஸ் கீழே விழுந்துவிட்டதால், மீண்டும் பந்தை பிடித்து அடித்தது செல்லாது என்பது நடுவர் தீர்பாகியது. ஆன்டர்சன்தப்பினார். அவர் அப்போது 33 ரன்களுடன் இருந்தார். ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் கிடைத்த வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா வீண் செய்துவிட்டது.