மும்பை: இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் அபிமன்யு ஈஸ்வரன். உள்நாட்டுப் போட்டிகளில் ரன்களைக் குவித்து வந்தாலும், இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது அவருக்கு நீண்டகாலமாக கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் அவர் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் அவர் நடத்திய உரையாடல் குறித்த தகவல்களும் தற்போது வெளிவந்துள்ளன. சமீபத்தில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 18 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டாலும் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இதே போலவே நடந்தது.

29 வயதான அபிமன்யு ஈஸ்வரன், பெங்கால் அணிக்காக விளையாடும் ஒரு திறமையான வலது கை தொடக்க ஆட்டக்காரர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் முதல்தரப் போட்டிகளில் விளையாடி வரும் இவர், இதுவரை 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று 48-க்கும் மேல் சராசரியுடன், 27 சதங்கள் உட்பட 7,800-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். குறிப்பாக, 2024-25 துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பை தொடர்களில் சதங்கள் அடித்து தனது அபாரமான ஃபார்மை வெளிப்படுத்தினார். இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாகவும் இவர் செயல்பட்டுள்ளார்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடித்திருந்தார். அந்தத் தொடருக்கு முன்பாக நடந்த இந்தியா 'ஏ' போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், நிச்சயம் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. காயங்கள் மற்றும் வீரர்களின் தேர்வு மாற்றங்களால் கடைசி டெஸ்டிலாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் நடக்காதது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதுகுறித்து அவரது தந்தை ரங்கநாதன் பரமேஸ்வரன் ஒரு பேட்டியில், "இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் அபிமன்யு மிகவும் வருத்தமடைந்தார். 'அப்பா, எனக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை' என்று என்னிடம் போனில் வருத்தப்பட்டார்" என்று கூறினார்.
இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் மனமுடைந்திருந்த அபிமன்யு ஈஸ்வரனுக்கு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைக் கூறியுள்ளார். இந்த உரையாடல் குறித்து அபிமன்யுவின் தந்தை கூறுகையில், "கம்பீர் என் மகனிடம், 'நீ சரியான பாதையில்தான் பயணிக்கிறாய். உனக்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அதுவும் நீண்டகால வாய்ப்பாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சோபிக்கவில்லை என்பதற்காக உன்னை அணியை விட்டு நீக்க மாட்டேன்' என்று உறுதியளித்துள்ளார்," என்றார்.
கம்பீரின் இந்த வார்த்தைகள், அபிமன்யுவிற்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளதாகவும், தற்போது துலீப் டிராபி தொடருக்காக அவர் தயாராகி வருவதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
ரிஷப் பன்ட் காயம் காரணமாக விலகியுள்ளதாலும், சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்பதாலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரன் நிச்சயம் பரிசீலிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுப் போட்டிகளில் அவரது நிலையான ஆட்டமும், நீண்ட காலமாக இந்திய அணியின் கதவுகளைத் தட்டி வருவதும் அவருக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. கம்பீரின் வாக்குறுதி உண்மையாகுமானால், பல வருடங்களாகக் காத்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனின் டெஸ்ட் கனவு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நனவாக அதிக வாய்ப்புள்ளது.