பெங்கால் கிரிக்கெட் அணி கேப்டனாக ஒரு தமிழர் நியமனம்..! கொண்டாடும் ரசிகர்கள்..!!
கொல்கத்தா: பெங்கால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரின் இந்த நியமனத்தை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய ஏ அணி வீரர் அபிமன்யு. 23 வயது கொண்ட இளம் வீரர். சில ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர். பெங்கால் அணிக்காக 50 முதல் தர ஆட்டங்களில் விளையாடி, 12 சதங்களும் 17 அரை சதங்களும் குவித்துள்ளார்.
அவரது ஆட்டத்திறன் காரணமாக, இந்தாண்டின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளுக்கும், பெங்கால் கேப்டனாக அபிமன்யு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று கடந்தாண்டு பெங்கால் அணி கேப்டனாக இருந்த மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.

கொல்கத்தா வந்தார்
அபிமன்யு தந்தை ஈஸ்வரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், தாய் பஞ்சாபி. உத்தர கண்டில் வசித்து வரும் இவர்களுடைய குடும்பம், அபிமன்யுவின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக அவரை கொல்கத்தாவுக்கு அனுப்பியது. ஆரம்பத்தில் பள்ளி மாணவராக டெஹ்ராடுனில் உள்ள தனது தந்தையின் நேஷனல் ஸ்கூல் ஆப் கிரிக்கெட்டில் பயின்றார். 9 வயதுக்குப் பிறகு கொல்கத்தாவில் பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.

விதமுறைகள் எளிது
வெளிமாநில வீரர்களை பெங்கால் அணியில் சேர்ப்பதற்கான விதிமுறைகள் ரொம்பவும் எளிது. ஆதலால், அவரது தந்தை கொல்கத்தாவை தேர்ந்தெடுத்தார். மேலும் தமிழ்நாடு போல பெங்காலிலும் கிரிக்கெட் அமைப்பு பலமாக இருந்தால் மகனின் வளர்ச்சிக்கு பெங்கால் மாநிலம் பொருத்தமாக இருக்கும் என்று ஈஸ்வரன் பெரிதும் நம்பினார்.

தொடக்கம் முதலே ஊக்கம்
கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தபோதிலும், சார்ட்டட் அக்கவுண்டட் ஆக மாறினார் ஈஸ்வரன். மகனுக்கும் கிரிக்கெட்டில் அவரை விட ஆர்வம் இருந்ததால், அதை கண்டு ஊக்கப்படுத்தினார். அபிமன்யு 1995ல் பிறப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு, நேஷனல் ஸ்கூல் ஆப் கிரிக்கெட்டை ஆரம்பித்தார் ஈஸ்வரன்.

ரசிகர்கள் வாழ்த்து
ரஞ்சி போட்டியில் முக்கியமான போட்டிகளில் சதங்கள் எடுத்தது, இந்திய ஏ அணியில் இடம், பெங்கால் கேப்டன் என 23 வயதுக்குள் படிப்படியாக முன்னேறி இருக்கிறார் அபிமன்யு. வெகு விரைவில் இந்திய அணியில் காலடி எடுத்து வைப்பார் என்று தமிழக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications