மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனுமான அபிஷேக் ஷர்மா, லீக் சுற்றின் மூன்று போட்டிகளில் ரன்கள் எடுக்கத் திணறினார். இருப்பினும், அணி நிர்வாகம் அவர் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, தொடர் முழுவதும் அணியில் தக்கவைக்கப்பட்டார். இந்த துணிச்சலான முடிவுக்குப் பின்னால் இருந்த காரணத்தை இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கினார்.
அம்ரித்ஸரைச் சேர்ந்த 25 வயதான இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. பிப்ரவரி 26 அன்று ஜிம்பாப்வேக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இறுதியாட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 21 பந்துகளில் 52 ரன்கள் குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். தொடரில் அவர் இரண்டு அரை சதங்களும், மூன்று டக்குகளும் அடித்திருந்தார்.

ஆரம்பத்தில் அபிஷேக்கின் மோசமான பேட்டிங் ஃபார்ம், அணியில் அவரது இடம் குறித்து பல கேள்விகளை எழுப்பியதுடன், அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கும் வழிவகுத்தது. ஆனால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இந்த விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் அபிஷேக்கிற்கு தொடர்ந்து ஆதரவளித்தார்.
தாம் ஏன் அபிஷேக்கிற்கு உறுதுணையாக இருந்தோம் என்பதை ஜியோஸ்டாரின் ஃபாலோ தி ப்ளூஸ்' நிகழ்ச்சியில் இந்திய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் விளக்கினார். "2014 ஐபிஎல் தொடரில் நான் இவரை விட மோசமான அனுபவத்தைப் பெற்றேன். தொடர்ந்து மூன்று டக்குகளையும், நான்காவது ஆட்டத்திலும் ஒரு டக்கையும் எடுத்தேன்" என்று கம்பீர் பகிர்ந்துகொண்டார்.
அபிஷேக்கிடம் "மக்கள் உங்களின் ஸ்கோர்களைப் பார்த்து, ஃபார்ம் குறித்துப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் ஃபார்மில் இல்லை என்பதல்ல, ரன்கள் எடுக்கவில்லை அவ்வளவுதான்" என்று விளக்கிய கம்பீர், "நடுவில் 20 முதல் 30 பந்துகளை விளையாடினால்தான் உங்கள் ஃபார்மையும், திறனையும் கணக்கிட முடியும். ஆனால் அபிஷேக் இன்னும் 20 பந்துகள் கூட எதிர்கொள்ளவில்லை" என்று தெளிவுபடுத்தினார். "அடுத்த போட்டியில் முன்பு இருந்ததை விட இன்னும் ஆக்ரோஷமாக விளையாடுமாறு அவரை நான் கேட்டுக்கொண்டேன்," என்றும் அவர் கூறினார்.

மேலும், அபிஷேக் தடுமாறிய காலகட்டத்திலும், இந்திய அணியின் ட்ரஸ்ஸிங் ரூமில் யாருக்கும் அவர் குறித்து சிறிதும் சந்தேகம் இல்லை என்று கம்பீர் திட்டவட்டமாகக் கூறினார். "உலகம் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்பது முக்கியமல்ல. அந்த ட்ரஸ்ஸிங் ரூமில் உள்ள 30 பேர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். டி20 உலகக் கோப்பையில் நாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவர் மீதும் நாங்கள் எப்போதும் முழு நம்பிக்கை வைத்திருந்தோம்" என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.