லக்னோ: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. லக்னோ அணியின் பவுலர் திக்வேஷ் ரதி மற்றும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மாவுக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது என்ன நடந்தது என முகமது கைஃப் விவரித்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் 206 இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடி துவக்கம் அளித்தார். அவர் 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். அவரை திக்வேஷ் ரதி ஆட்டமிழக்கச் செய்தார்.

அவரது விக்கெட்டை வீழ்த்திய பிறகு வழக்கம் போலப் புத்தகத்தை எடுத்து அபிஷேக் ஷர்மா பெயரை அதில் குறிப்பது போல சைகை செய்தார் திக்வேஷ். அதைப் பார்த்து அபிஷேக் ஷர்மா கோபமடைந்தார். தான் நன்றாக விளையாடியும் திக்வேஷ் ரதி பெரிய சாதனை செய்தது போல இது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை.
இதை அடுத்து அவர் வெளியேறும் போது திக்வேஷ் ரதியை பார்த்து "உனது முடியை கொத்தாக தூக்கி விடுவேன்" எனச் சைகை செய்தார். இது குறித்து முகமது கைஃப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என அவர் முழுமையாக விவரித்து இருக்கிறார்.
முகமது கைஃப் பேசியதாவது: "இது போன்ற ஒரு மோதலை நான் இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். அபிஷேக் ஷர்மா 'உனது முடியை பிடித்து இழுப்பேன்' எனக் கூறுகிறார். அபிஷேக் ஷர்மா தனது பொறுமையை இழந்து நான் இதுவரை பார்த்ததில்லை. அபிஷேக் ஷர்மா சற்று ஆக்ரோஷமானவர்தான், ஆனால் இயல்பிலேயே அவர் ஆக்ரோஷமானவர் இல்லை. அவர் சதம் அடித்தபோது கூட ஒரு காகிதத்தை எடுத்துத் தனது கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
திக்வேஷ் ரதி செய்யும் செயலை பேட்ஸ்மேன்கள் விரும்புவதில்லை. அபிஷேக் ஷர்மா தான் அரைசதம் அடித்த பிறகும் திக்வேஷ் ரதி அதை ஆக்ரோஷமாகக் கொண்டாடியதை விரும்பவில்லை. ஆனால், இந்தப் போட்டி முடிந்தவுடன் இருவரும் சமாதானமானது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது." என்றார் முகமது கைஃப்.
போட்டி முடிந்தவுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் பலரும் ஒன்று இணைந்து இருவருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தனர். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.