சண்டிகர்: சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா மிக மோசமாக விளையாடியதை அடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அபிஷேக் சர்மா வெறும் 141 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 17.62 ஆக மட்டுமே இருந்தது. தொடக்கத்திலேயே தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த அவர், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறினார். இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் ஒரு நிலையான ஆட்டம் இல்லை.
இந்நிலையில், அபிஷேக் சர்மாவின் கவனம் கிரிக்கெட்டில் இல்லை என யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "உங்கள் கவனம் வேறு எங்கோ இருக்கும் போது தான் தோல்வி வரும். சுப்மன் கில், அபிஷேக் சர்மாவுக்கு என்ன நடக்கிறது? அபிஷேக் எப்போதும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து கொண்டே இருக்கிறான். அது அவனது வேலை கிடையாது. அவன் இரவு 9 மணிக்கு தூங்கச் சென்று, அதிகாலை 5 மணிக்கு எழுந்து தினமும் 1000 பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து பார்ட்டி, பெண்கள், பணம், கேமரா என சுற்றினால் எப்படி கிரிக்கெட்டில் சாதிக்க முடியும்?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, இந்திய அணிக்குள் நுழைவதற்கு முன்பு அபிஷேக் சர்மா தனது வழிகாட்டியான யுவராஜ் சிங்கிடம் தான் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுட்டிக்காட்டிய யோக்ராஜ் சிங், "யுவராஜ் சிங் இடத்தை நெருங்குவதற்கு அபிஷேக் சர்மா இன்னும் ஒரு ஜென்மம் எடுக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த உலகமும் ஒழுக்கத்தின் அடிப்படையில் தான் இயங்குகிறது. கிரிக்கெட் வீரர்களும் அப்படித் தான் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

அபிஷேக் சர்மாவின் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், "அவனை நினைத்து நான் மிகவும் விரக்தியடைகிறேன். கிரிக்கெட் விளையாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நான் அவனுக்கு பலமுறை மெசேஜ் செய்துள்ளேன். அதற்கு அவன் எப்போதும் சரி சார் என்று தான் பதில் அளிப்பான். ஆடுகளத்தில் எப்போதும் சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்விக்க முடியாது. சிங்கிள், டபுள் என ரன்களை சேர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். காற்றில் பந்தை தூக்கி அடித்துக் கொண்டே இருந்தால் தோல்வி தான் மிஞ்சும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
