டெல்லி: டி20 உலககோப்பை 2026 குரூப் ஏ பிரிவில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் உலக நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மா உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த முக்கியப் போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உலக நம்பர் 1 டி20 பவுலர் வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் ஷர்மாவின் உடல்நலன் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். "அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை.

ஆனால் நான் அவரிடம் பேசிய வரையில், அவர் நன்றாக இருக்கிறார், இன்று பயிற்சியும் செய்தார். தான் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்," என்றார்.இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை டி20 உலகக் கோப்பை 2026-ன் மூன்றாவது குரூப் ஏ போட்டியில், வரும் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. பிப்ரவரி 7 அன்று மும்பையில் அமெரிக்காவுக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அபிஷேக், இப்போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
எனினும், வருண் சக்கரவர்த்தியின் இந்தக் கருத்துகளுக்கு மாறாக, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் போடும்போது மாறுபட்ட தகவலை வெளியிட்டார். நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கான அணி மாற்றங்கள் குறித்துக் கேட்டபோது, சூர்யகுமார், "அபிஷேக் இன்னும் சரியில்லை. அவர் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளைத் தவறவிடுவார். அவருக்குப் பதிலாக சஞ்சு இடம்பெறுகிறார், அவரும் அதிரடியான பேட்ஸ்மேன் தான்" என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிசிசிஐ எக்ஸ் தளத்தில் அபிஷேக் ஷர்மா குறித்த ஒரு பதிவை வெளியிட்டது. அதில், "அபிஷேக் ஷர்மா இன்னும் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வருகிறார். அவர் தேர்வு செய்ய முடியாத நிலையில் இருந்தார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரது உடல் நல முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது," என்று தெரிவித்துள்ளது.
அபிஷேக்கின் இல்லாத நிலையில், சஞ்சு சாம்சன் நமீபியாவுக்கு எதிராக இந்திய அணிக்காக இன்னிங்ஸைத் தொடங்கி, வெறும் 8 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். அவர் மூன்று சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்தபோதும் நல்ல தொடக்கத்தைப் பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார்.