ஜெய்ப்பூர்: உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா ஜெய்ப்பூரில் நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது சிக்ஸர் மழை பொழிந்துள்ளார். வெறும் 60 நிமிடங்களில் சுமார் 45 சிக்ஸர்களை விளாசி, மைதானத்திற்கு வெளியே இருந்த குடியிருப்புப் பகுதி வரை பந்துகளைப் பறக்கவிட்டு மிரட்டியுள்ளார்.
பஞ்சாப் அணியின் கேப்டனான அபிஷேக் சர்மா, ஜெய்ப்பூருக்குச் சற்று வெளியே உள்ள அனந்தம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியைத் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே தனது ஆக்ரோஷமான முகத்தைக் காட்டத் தொடங்கினார்.

அங்கிருந்த சக வீரர் கௌரவ் சவுத்ரியிடம், "பீல்டிங் செட்-அப் எப்படி இருக்கு?" என்று ஒரு கற்பனையான கேள்வியைக் கேட்டார். அதற்கு அவர், "மிட்-ஆஃப் சிங்கிள் தடுப்பதற்காக நிற்கிறார்" என்று சொல்ல, அடுத்த நொடியே தனது பேட்டைச் சுழற்றி பந்தை கண்ணுக்கே தெரியாத தூரத்திற்கு அடித்தார் அபிஷேக். இதுதான் அவரது அந்த ஒரு மணி நேர ஆட்டத்தின் ஆரம்பம்.
45 சிக்ஸர்கள் - தடுப்பாட்டமே கிடையாது!
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த வலைப்பயிற்சியில், 'டிஃபன்ஸ்' என்றால் என்னவென்றே தெரியாதது போல் ஆடினார். முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களைக் குறிவைத்தே அவரது பயிற்சி அமைந்தது. ஆஃப்-ஸ்பின், லெக்-ஸ்பின் என மாறி மாறி பந்துவீசிய போதும், அவர் இறங்கி வந்து அடித்த அடிகள் எல்லாம் சிக்ஸர்களாகப் பறந்தன. கணக்குப்படி பார்த்தால் அந்த 60 நிமிடங்களில் குறைந்தபட்சம் 45 சிக்ஸர்கள் பறந்திருக்கும்.
அந்த ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தது. பந்து தாறுமாறாகத் திரும்பியதோடு, சில பந்துகள் எழும்பியும், சில பந்துகள் தாழ்வாகவும் வந்தன. ஆனாலும், அபிஷேக் சர்மா தனது கால்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி பந்தின் லென்த்தை கணித்து விளாசினார்.
குறிப்பாக, 'எக்ஸ்ட்ரா கவர்' திசையில் அவர் அடித்த இன்சைட்-அவுட் ஷாட்கள் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தன. அவர் அடித்த அடியில், குறைந்தது 5 பந்துகள் மைதானத்திற்கு அருகில் உள்ள உயரமான குடியிருப்பின் போர்டிகோவிற்கே சென்று விழுந்தன.
அபிஷேக் சர்மா தொடர்ந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸர் அடிப்பதைப் பார்த்த தலைமைப் பயிற்சியாளர் சந்தீப் சர்மா, பஞ்சாபி மொழியில் கிண்டலாக, "நீ செஞ்சுரி மொத்தத்தையும் எக்ஸ்ட்ரா கவர்ல சிக்ஸர் அடிச்சே முடிச்சிடுவ போல இருக்கே?" என்று கேட்க, அதற்கும் சிரித்துக்கொண்டே சிக்ஸர் மூலம் பதிலளித்தார் அபிஷேக்.
25 வயதான அபிஷேக் சர்மா, பயிற்சியின் போது பந்துவீச்சாளர்களிடம், "ஸ்டம்ப் லைனில் பந்து வீசுங்கள்" என்று கேட்டு வாங்கி அடித்தார். அந்த ஒரு மணி நேரத்தில் அவர் 3 அல்லது 4 முறை மட்டுமே அவுட் ஆகியிருப்பார். ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அவர் தடுப்பாட்டம் ஆட முயன்றபோதுதான் அவுட் ஆனாரே தவிர, தாக்கி ஆடும்போது அவர் விக்கெட்டை விடவே இல்லை.
எந்தச் சூழலிலும் எதிரணியைத் தாக்கி ஆட வேண்டும் என்ற இந்திய அணியின் தாரக மந்திரத்தை, அபிஷேக் சர்மா தனது ரத்தத்தில் ஊற வைத்துள்ளார் என்பதை இந்த வலைப்பயிற்சி உணர்த்தியுள்ளது. அடுத்து வரும் 9 வாரங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அதிரடியை சர்வதேச போட்டிகளிலும் எதிர்பார்க்கலாம்.