டெல்லி: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்திய அணி நமீபியாவுக்கு எதிரான தனது இரண்டாவது லீக் ஆட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில், முக்கிய வீரர்களின் உடற்தகுதி குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், நமீபியாவுடனான வியாழக்கிழமை போட்டியில் அவரது பங்களிப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நிலைமை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிகாரப்பூர்வமாக காய்ச்சல் எனக் கூறப்பட்டாலும், அவருக்கு உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில், கடும் காய்ச்சலுடன் களமிறங்கிய அவர், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அணி பேட்டிங் செய்தபோது அபிஷேக் களமிறங்கவில்லை. இந்திய அணியின் வீரர்கள் உடை மாற்றும் அறையிலும் அவர் காணப்படவில்லை. அவருக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க, மருத்துவமனையில் டிரிப் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 25 வயதான அபிஷேக், நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியிலும் பங்கேற்கவில்லை.
அபிஷேக்கின் தற்போதைய உடற்தகுதி குறித்து இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்ஷேட் விளக்கமளித்தார். "அபிஷேக்கின் வயிறு தொடர்பான சில சிக்கல்கள் இன்னும் உள்ளன. நமீபியா போட்டிக்கு அவர் பங்கேற்பார் என்று நம்புகிறோம். அவரது உடற்தகுதிக்காகவே நாங்கள் மற்ற எதையும் விட அதிகமாகக் காத்திருக்கிறோம்" என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்திய ரசிகர்களுக்கு சற்று ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. முதன்மை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நமீபியாவுக்கு எதிரான வியாழக்கிழமை போட்டியில் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக, பும்ரா அமெரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ராவின் நிலை குறித்து டென் டோஸ்ஷேட் கூறுகையில், "பும்ரா இன்றும் பந்துவீசுவார். அவர் பத்து நாட்களுக்கும் மேலாகப் பந்துவீசவில்லை என்றாலும், இப்போது மிகுந்த நலமாக உணர்கிறார், அவரது இயக்கங்களும் சிறப்பாக உள்ளன. எனவே, இன்றைய மற்றும் நாளைய பயிற்சிகளைப் பார்த்துவிட்டு, வியாழக்கிழமை போட்டிக்கான அணியைத் தேர்வு செய்வோம்" என்று தெரிவித்தார்.
மற்றொரு நல்ல முன்னேற்றமாக, ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், தனது விலா எலும்பு காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் அனுமதியைப் பெற்ற பிறகு, அவர் இந்திய அணியுடன் டெல்லியில் மீண்டும் இணைந்துள்ளார்.