கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், அவரது மோசமான ஃபார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் டூ பிளெசிஸ் தங்களது கருத்தைப் பகிர்ந்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அடுத்ததாக மார்ச் 5ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதி நெருங்கிவிட்ட நிலையில், தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவின் ஆட்டம் பேசுபொருளாகியுள்ளது.
நடப்பு தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே அவர் 55 ரன்கள் குவித்து அரைசதம் அடித்திருந்தார். மற்ற போட்டிகளில் அவர் சோபிக்கவில்லை. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, 13.33 என்ற மோசமான சராசரியுடனும், 131.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் வெறும் 80 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் தொடக்கத்தில் ஹாட்ரிக் டக் அவுட் ஆனதும் அடங்கும்.

இது குறித்து பேசிய அனில் கும்ப்ளே, அபிஷேக் சர்மா தற்போதைய சூழ்நிலையில் மனதளவில் சற்று குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார். "அவரது மனதில் இப்போது குழப்பம் நிறைந்துள்ளது. தன்னிடம் போதுமான தன்னம்பிக்கை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்திய அணி வெற்றி பெற்று வருவதால், மற்ற பேட்டர்கள் தனது அழுத்தத்தைக் குறைப்பார்கள் என்று அவர் நினைக்கிறார். தற்போது அணி அரையிறுதிக்குச் சென்றுள்ளதால், இனி நான் எனது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று அவர் எண்ணத் தொடங்குவார்.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும். அவர்களிடம் வில் ஜாக்ஸ் போன்ற பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் பவர் பிளேயில் வில் ஜாக்ஸை பந்துவீச வைப்பார். இது அபிஷேக் சர்மாவுக்குக் கூடுதல் நெருக்கடியைக் கொடுக்கும்" என்று கும்ப்ளே விவரித்தார்.

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஃபாப் டூ பிளெசிஸ், அணியின் வெற்றி அபிஷேக் சர்மாவைக் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்தார். "இந்திய அணி வெற்றி பெற்று வருவது அவருக்கு ஒரு நல்ல விஷயமாகும். ஒரு அணி வெற்றி பெறும்போது ஃபார்மில் இல்லாத வீரரின் குறைகள் அணியால் மறைக்கப்பட்டுவிடும். ஆனால் அணி தோற்றால், அந்தப் பழி ஃபார்மில் இல்லாத வீரர் மீதுதான் விழும். ஒருவேளை கொல்கத்தாவில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தால், அனைவரின் விரல்களும் அபிஷேக் சர்மாவை நோக்கியே நீண்டிருக்கும்.
ஆனால் தற்போது அவர் அரையிறுதியில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வாரா என்ற நேர்மறையான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்று டூ பிளெசிஸ் கூறினார்.

அபிஷேக் சர்மா மோசமான ஃபார்மில் இருந்தாலும், அரையிறுதி போன்ற முக்கியமான போட்டியில் அவரை அணியிலிருந்து நீக்கக் கூடாது என்று அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார். அரையிறுதியில் இங்கிலாந்து அணியின் வியூகங்களை முறியடித்து அபிஷேக் சர்மா தனது திறமையை நிரூபிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.