மும்பை: டி20 உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அபிஷேக் ஷர்மாவை, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க வீரராக பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் முன்னணியில் இருந்தாலும், டி20-களில் பவர்பிளேயை ஆக்ரோஷமாகப் பயன்படுத்தும் அபிஷேக்கின் திறனை பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், "அபிஷேக் ஷர்மா 50 ஓவர் உலகக் கோப்பைக்கான பரிசீலனையில் இருக்க வேண்டும். ஜெய்ஸ்வால், கெய்க்வாட் போன்றோர் முன்னணியில் உள்ளனர். ஆனால், டி20-களைப் போலவே பவர்பிளேயில் அவர் ஆதிக்கம் செலுத்துவதை கற்பனை செய்து பாருங்கள்," என்று குறிப்பிட்டிருந்தார்.

நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 25 வயதான இடதுகை அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்தார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்காக தொடக்க வீரராகக் களமிறங்கிய அவர், வெறும் 35 பந்துகளில் 84 ரன்கள் (5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) விளாசினார்.
இந்த ஆட்டத்தில் தனது அரை சதத்தை வெறும் 22 பந்துகளில் எட்டிய அபிஷேக், இந்திய அணிக்காக நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக டி20 அரை சதம் அடித்த சாதனையை படைத்தார். இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இப்போட்டியில், டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
இர்பான் பதான் பரிந்துரைத்த போதிலும், அபிஷேக் ஷர்மா இன்னும் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகவில்லை. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 69 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4 சதங்கள், 8 அரை சதங்களுடன் 2196 ரன்கள் (சராசரி 33.78, ஸ்ட்ரைக் ரேட் 100.18) மற்றும் சுழற்பந்துவீச்சில் 41 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.