மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து "ஹாட்ரிக் டக் அவுட்" ஆகி இருப்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, இந்திய அணியின் முக்கிய அதிரடி தொடக்க வீரராகப் பார்க்கப்பட்டார். ஆனால், தனது முதல் ஐசிசி தொடரிலேயே அவர் ரன் கணக்கைத் தொடங்க முடியாமல் தவித்து வருகிறார். அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடி ரன் குவிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பே அவருக்குப் பின்னடைவாக மாறியுள்ளது. முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை ஆட முயற்சி செய்து அவர் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வருகிறார்.
அபிஷேக் சர்மாவின் இந்தச் சறுக்கல் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அபிஷேக் சர்மா தற்போது மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய கவாஸ்கர், "அபிஷேக் சர்மா ஒரு திறமையான வீரர். ஆனால், தற்போது அவர் மீதான எதிர்பார்ப்புகள் அவருக்குப் பாரமாக மாறியுள்ளன. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தால் நிலைமை மாறியிருக்கும். இப்போது அவர் ஒரு பெரிய சிக்ஸர் அடிப்பவர் மற்றும் அதிரடி வீரர் என்ற பிம்பத்தைத் தக்கவைக்கப் போராடுவது அவரது ஆட்டத்தில் தெரிகிறது" என்று தெரிவித்தார்.
அபிஷேக் சர்மா மீண்டும் பார்முக்குத் திரும்ப கவாஸ்கர் சில எளிய மற்றும் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். "களமிறங்கியதும் முதல் பந்திலேயே பெரிய ஷாட்களை ஆட முயற்சிக்கக் கூடாது. முதலில் ஒரு சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்குவதே மிக முக்கியம். இன்னிங்ஸின் தொடக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டும். முதல் நான்கு பந்துகளை ரன் ஏதும் எடுக்காமல் வீணடித்தாலும் கவலையில்லை. களத்தில் சிறிது நேரம் செலவழித்தால் தானாகவே ரன்கள் வரும்."
"ஒருமுறை ரன் கணக்கைத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தலாம். ஆனால், தொடக்கத்திலேயே கட்டாயப்படுத்தி பெரிய ஷாட்களை ஆடக் கூடாது. மைதானத்தில் நிலைத்து நிற்பது ஒரு பேட்டருக்குத் தன்னம்பிக்கையைத் தரும். அதன் பிறகு அவர் இழந்த ரன்களை எளிதாக ஈடுகட்ட முடியும்." இவ்வாறு கவாஸ்கர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
அபிஷேக் சர்மா வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் சமீபத்திய போட்டிகளில் தடுமாறியுள்ளார். கவாஸ்கரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி அவர் அடுத்த போட்டிகளில் நிதானமாக ஆடி மீண்டும் பழைய பார்முக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.