மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டர்களும், 13 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் அபிஷேக் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக உருவெடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவை புகழ்ந்து பேசிய ஹர்பஜன் சிங், டெஸ்ட் அணியில் அவரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் டாப் மூன்றாவது வீரராக அபிஷேக் ஷர்மா விளையாடும் காலத்தை நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

அப்படி இருந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை எவ்வளவு பலமாக மாறிவிடும். அந்த நாள் இன்னும் வெகு தூரத்தில் இல்லை. இன்னும் ஆறு மாதத்தில் கூட நடக்கலாம். அபிஷேக் ஷர்மா வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளில் இந்தியாவுக்காக நிரந்தர வீரராக நிச்சயம் இடம்பெறுவார்.
அதுமட்டுமில்லாமல் அபிஷேக் ஷர்மாவை டெஸ்ட் அணியிலும் நாம் விரைவில் பார்க்கலாம். அவரால் டெஸ்ட் கிரிக்கெட் நிச்சயமாக விளையாட முடியும். டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அதிரடி காட்டுவார். தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் கேப்டனாகவே அவர் தான் இருக்கின்றார். அவருடைய நாளில் எதிரணியிடமிருந்து அபிஷேக் ஷர்மா போட்டியை கவர்ந்து சென்று விடுவார்.
டிராவிஸ் ஹெட், இதை தான் செய்து வருகிறார். ஷேவாக், விவயன் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இதை தான் செய்தார்கள். இது போன்ற வீரர்கள் தான் அதிரடியாக விளையாடி போட்டியை முன் கொண்டு செல்வார்கள். இன்றோ இல்லை நாளையோ டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
சேவாக் போல் விளையாடக்கூடிய ஒரு வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவை. அப்போதுதான் அவர்கள் அதிரடியாக விளையாடி எதிரணியிடமிருந்து போட்டியை கவர்ந்து சென்று விடுவார்கள். அந்த ஒரு வீரர் அபிஷேக்சர்மாவாக இருக்கலாம் என்று ஹர்பஜன் கூறியுள்ளார். இதுவரை 24 முதல் தர போட்டிகளில் அபிஷேக் சர்மா விளையாடி இருக்கிறார்.இதில் மொத்தமாக அவர் 1071 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரியாக 30 ரன்கள் அடங்கும். இதில் ஒரு சதம், ஐந்து அரை சதம் அடித்திருக்கிறார்.