ஹைதராபாத்: சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனும், டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம் ஆடினார். பலம் வாய்ந்த வங்காள அணிக்கு எதிராகக் களமிறங்கிய அவர், வெறும் 12 பந்துகளில் அரைசதம் விளாசி மைதானத்தை அதிர வைத்தார். அத்துடன் நிற்காமல் 16 சிக்ஸ் அடித்து சதம் கடந்தார். 52 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார்.
ஹைதராபாத் ஜிம்கானா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பஞ்சாப் மற்றும் வங்காள அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை தொடங்கிய அபிஷேக் சர்மா, முதல் பந்திலிருந்தே வெளுத்து வாங்கினார்.

வங்காள அணியில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், அபிஷேக் சர்மா யாரையும் விட்டுவைக்கவில்லை. 12 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 425.00-ஆக இருந்தது பார்ப்பவர்களை மிரள வைத்தது.
அதன் பிறகும் நிற்காமல் அதிரடி ஆட்டம் ஆடிய அபிஷேக் சர்மா 284.62 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 16 சிக்ஸர்கள், 8 ஃபோர் அடித்து 148 ரன்கள் குவித்தார். பிரப்சிம்ரன் சிங் 35 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார்.
2025 ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஷமியுடன் ஒரே அணியில் இருந்தவர் அபிஷேக். ஆனால் இன்று எதிரணியாக வந்ததும் ஷமியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஷமி 4 ஓவர்களில் 61 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார். ஆகாஷ் தீப் 4 ஓவர்களில் 55 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அபிஷேக் சர்மா முறையே 4 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்திருந்தார். அதுமட்டுமின்றி, ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் 'கோல்டன் டக்' ஆகி வெளியேறியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
கேப்டனாக இருந்துகொண்டு இப்படி சொதப்பலாமா? என்று கேள்விகள் எழுந்த நிலையில், இன்று தனது அசுரத்தனமான ஆட்டத்தின் மூலம் விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார். அவரது அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்துள்ளது.