டெல்லி: 2026 டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 10 போட்டிகளே மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மழையால் இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டாலும், இந்தத் தொடர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த பரிசோதனை களமாக அமைந்தது. தற்போதைய டி20 அணியின் பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண இந்தத் தொடர் உதவியது.
இந்தத் தொடரின் மிகப்பெரிய நம்பிக்கை அபிஷேக் சர்மாதான். இந்திய மைதானமோ, ஆஸ்திரேலியாவின் பெரிய பவுண்டரிகளோ, எங்கும் சிக்ஸர் அடிக்கும் திறனை வெளிப்படுத்தி, அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்துள்ளார். பவர்பிளே ஓவர்களில் அவரது அச்சமற்ற அணுகுமுறை, இந்திய டி20 பேட்டிங்கிற்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. 163 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம், உலகக் கோப்பைக்கான தொடக்க வீரர் இடத்திற்கு அவர் வலுவான முத்திரையைப் பதித்துள்ளார்.
ஒருபுறம் அபிஷேக் ஜொலிக்க, மறுபுறம் துணை கேப்டன் சுப்மன் கில்லின் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் அதிரடியான ஆட்டம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தத் தொடரில் பல வாய்ப்புகள் கிடைத்தும், அவரால் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவரது திறமைக்கு இது போதாது என்பதே நிதர்சனம். டி20 அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க, அவர் விரைவில் தனது ஃபார்மைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தனது ஃபார்மை முழுமையாக மீட்டாரா? என்ற கேள்விக்கு விடை இல்லை. ஆனால், சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுழற்பந்து, வேகப்பந்து இரண்டையும் சமாளிக்கும் திறன்கொண்ட சாம்சனைப் புறக்கணித்தது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
திலக் வர்மாவுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவரால் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. அதே சமயம், ஜிதேஷ் சர்மா தனக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பில் 13 பந்துகளில் 22* ரன்கள் அடித்து, தனது ஃபினிஷிங் திறனை நிரூபித்தார். ரிங்கு சிங் அணியில் சேர்க்கப்பட்டது, நிர்வாகம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்தத் தொடரின் நாயகர்களில் ஒருவராக ஜொலித்தார் அக்சர் படேல். பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அணிக்குத் தேவைப்படும் போதெல்லாம் தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார். வாஷிங்டன் சுந்தரின் வருகை இந்திய அணிக்கு பெரும் பலம் கொடுத்துள்ளது. புதிய பந்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியதுடன், மூன்றாவது போட்டியில் 49* ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அக்சர் மற்றும் சுந்தரின் ஃபார்ம், இந்திய அணியின் டி20 திட்டங்களில் அவர்கள் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டதை உறுதி செய்துள்ளது.
சிவம் துபேவுக்கு இந்தத் தொடர் ஒரு கலவையான அனுபவத்தையே தந்தது. பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்றாலும், பந்துவீச்சில் ஓரளவு பங்களித்தார். ஹர்திக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் திரும்பும் வரை, துபே ஒரு பயனுள்ள மாற்று வீரராக இருப்பார்.
ஜஸ்பிரித் பும்ராவின் அனுபவமும், அர்ஷ்தீப் சிங்கின் இடது கை வேகப்பந்து வீச்சும் இந்திய அணிக்கு ஒரு வலுவான வேகப்பந்துவீச்சுக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் இவர்களது கட்டுப்பாடு அணிக்கு மிகப்பெரிய பலம். அர்ஷ்தீப் சிங்கை வெளியே அமர வைப்பது சரியான முடிவல்ல என்பதை இந்த தொடர் உணர்த்தி இருக்கிறது. எனவே, ஹர்ஷித் ராணா மாற்று வேகப் பந்துவீச்சாளராக வெளியே இருப்பதே சரி என்ற முடிவையும் எடுக்க வேண்டி உள்ளது.
மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி மிடில் ஓவர்களில் காட்டிய கட்டுப்பாடு மற்றும் 'வேரியேஷன்கள்' ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தன. அவர் எந்த நாடாக இருந்தாலும் விக்கெட் வீழ்த்த முடியும், பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
இந்த டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்தவுள்ளது. முதல் டெஸ்ட் நவம்பர் 14 அன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின் அடுத்த தொடரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவே, டிசம்பர் 9-ம் தேதி கட்டாக்கில் தொடங்குகிறது.