பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதை, இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹன்ட்ரட்' தொடருக்காக சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்த போதிலும், அப்ரார் அகமது சிறிதும் கலங்கவில்லை என்றும் தொடரில் விளையாட முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த அப்ரார் அகமது, தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். காவியா மாறனுக்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அவரை சுமார் ரூ. 2 கோடி தொகைக்கு கடந்த வாரம் ஒப்பந்தம் செய்தது. இந்திய உரிமையாளர் வசம் உள்ள இந்த அணி, அப்ராரை ஒப்பந்தம் செய்ததற்கு இந்தியாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனினும், அப்ரார் அகமது இந்த விமர்சனங்களால் சோர்வடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களின் மரணத்திற்கு காரணமான பாகிஸ்தான் ராணுவத்திற்கு மறைமுகமாக நிதியுதவி செய்யும் ஒரு வழியாகவே இந்த ஒப்பந்தத்தை கவாஸ்கர் சித்தரித்துள்ளார். அவரது கருத்துகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கடும் எதிர்ப்புகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ அல்லது அப்ரார் அகமதோ இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும், இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு இடையிலான விவகாரம் என்பதால் தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என பிசிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"அப்ராரின் ஒப்பந்தம் குறித்த இந்த சலசலப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இந்த சர்ச்சை குறித்து அவர் கவலைப்படவில்லை," பிசிபி வட்டாரங்கள் தெரிவித்தன. "அப்ரார் உலகம் முழுவதும் உள்ள லீக் போட்டிகளில் விளையாட ஆர்வத்துடன் உள்ளார். டி20 தரவரிசையில் முதல் மூன்று பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார், அது அவருக்கு கிடைத்த உரிய அங்கீகாரம்," என்றும் அந்தத் தகவல்கள் குறிப்பிட்டன.
நியூசிலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரும், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் பயிற்சியாளருமான டேனியல் வெட்டோரி, அப்ரார் அகமதை தொடர்புகொண்டு, ஒப்பந்தம் குறித்த தகவலைத் தெரிவித்தார். சிறப்பாகச் செயல்பட தயாராக இருக்குமாறு அவருக்கு வெட்டோரி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெட்டோரி நியூசிலாந்து அணிக்காக 442 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் அப்ராரை ஒப்பந்தம் செய்த பிறகு பேசிய வெட்டோரி, "ஆரம்பத்தில் எங்கள் முன்னுரிமை அடில் ரஷீத். அவர் சதர்ன் பிரேவ் அணிக்கு சென்ற பிறகு, நாங்கள் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களை ஒப்பந்தம் செய்ய முனைந்தோம். நான்கு அல்லது ஐந்து வீரர்களை நாங்கள் கண்காணித்து வந்தோம், அப்ரார் அவர்களில் ஒருவர். அவரைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சி," என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் வீரர்களின் குடியுரிமையின் காரணமாக அவர்களை புறக்கணித்தால், 'தி ஹன்ட்ரட்' தொடரின் அணிகள் ஒழுங்கு நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமானது.

சுனில் கவாஸ்கரின் இந்த கருத்துகளை முன்னாள் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனும், யார்க்ஷயர் வீரருமான அஜீம் ரபிக் கடுமையாக விமர்சித்துள்ளார். ரபிக் தனது X சமூக ஊடக தளத்தில், "இது அபத்தமானது; கண்டிக்கத்தக்கது. இந்தக் கருத்துகள் எப்படி ஏற்கத்தக்கவை? நீங்கள் எத்தனை ரன்கள் அடித்தீர்கள் என்பது எனக்கு கவலையில்லை. கவாஸ்கரிடமிருந்து மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்துள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.